தேவர் வாழ்த்துரைக்க இராமன் தேரேறிச் செல்லுதலும், இராவணன் இராமனை நோக்கி வருதலும், மகோதரன் இராமனால் மடிதலும், தீ நிமித்தங்களைப் பொருட் படுத்தாது இராவணன் துணிதலும், இராவணனின் போர்த் திறங்களும், வர வலிமையும் சிறிது சிறிதாய் அழிய இராமன் கடவுள் அவதாரமோ என எண்ணி யாரேயாயினும் போரிடுவது என முடிவு செய்தலும், அம்பு பட்டு இராவணன் மயங்கிய காலை அவனைக் கொல்லுமாறு மாதலி கூறியதை இராமன் ஏற்க மறுத்தலும், தேறிய இராவணன் கடும் போர் புரியப் பிரம்மாத்திரத்தால் அவனை இராமன் மாய்த்தலும், அவன் முதுகுத் தழும்பு கண்டு இராமன் நாணியபோது வீடணன் உண்மை கூறித் தெருட்டலும், பின்னர் பகை விடுத்து இறுதிக் கடன் செய்யுமாறு வீடணனை இராமன் தூண்டுதலும், வீடணன் துயரும், இராவணன் மனைவியர் புலம்பலும், மண்டோதரி பிரிவாற்றாது புலம்பி மாய்தலும், இராவணனுக்கும் பிற அரக்கர்க்கும் இறுதிக்கடன் செய்து வருந்திய வீடணனை இராமன் தேற்றுதலும் இப்படலத்துப் பொருளாக அமைந்துள்ளன. |