பேரறிவினர் பெறத்தகு முத்தியாகிய திருவருட் செல்வத்தைக் குறைந்த மதியினராய்ப் பிறப் பிறப்பிற் பட்டுச் சுழல்வோர்களும் எளிதினிற் கைகூடப் புதிதாய சூழ்ச்சியை எமக்கருள் செய் என்ன மலரிலுறை பிரமன் இளம்பிறையைத் தரித்தவராகிய சிவபெருமான் திருப்பதங்களைப் போற்றிப் பின்னர் விரித்துரைக்கின்றான். பற்றிக லற்றுக் குற்றமில் சிந்தைப் பனவீர்காள் கற்றுயர் காட்சிக் கொற்றமி லோருங் கருநோய்தீர் பெற்றியின் உற்றுப் பெறலரு முத்திப் பேறெய்தும் அற்றமில் ஏதுக் கேண்மின் நுமக்கின் றறைகிற்பேன். 5 | உறவும், பகையும் நீங்கிக் குற்றமற்ற மனத்தையுடைய அந்தணிர் காள்! கற்றமையால் உயர்ந்த அறிவு வலியிலரும் பிறவிநோய் தீரும் பரிசு கிடைத்துப் பெறற்கரிய சிவப்பேற்றினை அடையும் தளர்ச்சியில்லாத வலிவுடைய உபாயம் நுங்கட்கின்றறைவேன்; அதனைக் கேளுங்கள். அறுசீரடி யாசிரிய விருத்தம் தருமமென் றியம்பும் ஒன்றே தழல்விடம் பருகும் எங்கோன் திருவுளங் கருணை பூப்பச் செய்யும்அவ் வருளால் யார்க்கும் மருவரு முத்திப் பேறு வாய்க்கும்அத் தருமந் தானும் அருள்சிவ தருமம் ஆவித் தருமம்என் றிருகூ றாமால். 6 | தருமம் என்று கூறப்பெறும் ஒன்று தானே தீயை ஒக்கும் விடத்தைப் பருகும் எமது பெருமான் திருவுள்ளத்தில் கருணை தழைப்பச் செய்யும். திருவுள்ளக் கருணை மேலீட்டால் யாவராயினும் அவர்க்குப் பொருந்துதற்கரிய சிவப்பேறு கைகூடும். அத்தகு தருமமும் அருளைத் தரும் சிவபுண்ணியம் எனவும், பசு புண்ணியம் எனவும் இருவகைப்படும். பளகறும் இட்டி யாதி பசுதரு மங்கள் காலத் தளவையிற் கழியும் என்றும் வச்சிர அரிசி மானத் தளர்வுறா நிலைபே றெய்தும் உயர்சிவ தருமம் அன்பால் உளமுறச் சிவனை எண்ணல் முதற்பல உளவாம் அன்றே. 7 | குற்றம் தவிர்ந்த வேள்வி முதலிய பசு புண்ணியங்கள் தத்தம் பயனைக் கொடுத்துக் கால அறுதியிற் கழிந்து போம். உயர்ந்த சிவ புண்ணியங்கள் என்றும் அழியாது வயிரத்தால் செய்யப்பெற்ற அரிசியை ஒப்பத் தளர்ச்சி எய்தாத நிலைபேற்றினை எய்தும்; அன்போடும் உள்ளத்துள் ஊன்றச் சிவபெருமானை மனத்தால் எண்ணுதல் முதல் பல உள்ளனவாகும். பசு தருமங்கள் தத்தம் பயன்களை உதவிப் பின்பு அழிந்துவிடும். சிவதருமங்கள் பயனையும் உதவி அழியாது மேலும் ஞானத்திற்கு ஏதுவாய் வீட்டினை நல்கும். மனம், மொழி, மெய் இவற்றால் செய்தல், செய்வித்தல், உடன் படல் ஆக வளர்த்தல் கூடும், அழிதலும். அழியாமையும் உடைய இவ்விரண்டன் வேறு பாடுகள் மெய்கண்ட தேவ |