‘வலம் வரப் புகும் அப்பொழுதும் வெளிவருங் காலத்தும் வாயிலிடத்தை நுழைவழியாக அமைப்போம். வெளிப்படலும், புகுதலுமாகிய அவையே கருமப் பயனை நுகர வரும் பிறப்பும் இறப்பும் என்னும் பிரிவினவாய் விளங்க இவ்விடை வருந்துறாது வாழ்மின். முடிவில் முத்திப் பேற்றினை வழங்குவோம்!’ சுருங்கை-நுழைவழி; திட்டிவாயில் (திருநகரப்படலம். 81.) சித்திகள் எவையும் நல்கும் விசித்திரச் சிற்பம் வாய்ந்து சித்தர்கள் அருச்சித் தேத்தத் திகழ்கயி லாய மேன்மை சித்தமா சகன்றோர்க் கன்றித் தெரிவுறா காண்மி னென்று சித்தசன் எரிய நோக்குஞ் சேவகன் கரந்து போந்தான். 41 | ‘கருதிய பேறுகள் எவற்றையும் வழங்குதற்கிடனாய் அதிவிசித்திரச் சிற்பங்கள் அமைந்து சித்தர்கள் அருச்சனை செய்து போற்றத் திகழ்கின்ற கயிலாயத்தின் மேம்பாடுகள் ஆணவ மலவலி தொலைந்து, மெய்யறிவு பெற்றவர்க்கு அன்றி ஏனையோர்க்கு விளங்கா காணுங்கோள்’ என்று மன்மதனை நீறுபட நோக்கிய வீரராகிய பெருமானார் மறைந்தருளினர். இருவரும் அவ்வா றங்கண் இறைவனை வலஞ்செய் தேத்திக் கருவற நெடுநாள் வைகித் திருவருட் கலவி பெற்றார் திருவளர் காஞ்சி மூதூர்த் திண்பெருங் கயிலை போலும் ஒருதலம் அதுவே யன்றி உலகம்மூன் றிடத்தும் இல்லை. 42 | இறைவன் அருளிய வாறே அத்தலத்தில் இருவரும் சிவபிரானை வலஞ்செய்து வணங்கித் துதித்துப் பிறவி நீங்க நெடுங்காலம் தங்கியிருந்து திருவருளிற் றலைப்பட்டனர். திண்ணிய பெரிய கயிலையை ஒக்கும் ஓர் தலம் அக்கயிலாயநாதர் கோயிலே அன்றி மூன்றுலகங்களிலும் வேறொன்றில்லை. கயிலாயப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம் 1056 |