யுடைய மங்கள தீர்த்தம் வகுத்து நீராட்டித் தொழுதனர். விருப்புடைய செவ்வாய்க்கிழமை அந்நீரில் மூழ்கி வணங்குவோர் இம்மை மறுமை நன்மைகளைப் பெறுவார். இராமநாதேச்சரம் உரைத்ததன் குடபால் தசரதன் மதலை அரக்கனை அடுபழி ஒழிப்பான், அருட்குறி யிருத்திச் சேதுவில் தொழுதங் கண்ணலார் ஏவலிற் காஞ்சி, வரைப்பின்உற் றிராம நாதனை நிறுவி வழிபடூஉக் கொடுவினை மாற்றித், திரைப்புனல் அயோத்திப் புகுந்தர சளித்தான் சேதுவில் சிறந்ததத் தலமே. 36 இதற்கு மேற்கில் இராமபிரான் இராவணனைக் கொன்ற பழி நீங்கும் பொருட்டுச் சிவலிங்கம் நிறுவி இராமேச்சுரத்தில் தொழுது அப்பெருமானார் ஆணைப்படி காஞ்சி நகரைக் கூடி இராமநாதரைத் தாபித்து அருச்சித்துத் துதித்துப்பாவத்தைப் போக்கி அயோத்தியை எய்தி அரசு பூண்டனர். இத்தலம் சேதுவினும் சிறப்புடையதாகும். மாதலீச்சரம் இனையதன் வடபால் மாதலி என்பான் இராகவன் இலங்கையர் கோமான், றனைஅடு ஞான்று வாசவன் விடுப்பத் தயங்குதேர் செலுத்துவா னாகி, நனைமலர் வாகை, முடித்தபின் இராமன் றன்னொடு காஞ்சியை நண்ணிப், புனைபுகழ் மாதலீச்சரந் தொழுது புரந்தரற் கினியவ னானான். 37 இதற்கு வடக்கில் இந்திரனால் ஏவப்பெற்ற அவன் சாரதி மாதலி என்போன் இராகவன் இராவணனைக் கொன்ற போரில் அவ்வீராகவனுக்குத் தேரோட்டி வெற்றி கண்ட பின்னர் இராமனோடும் காஞ்சியை எய்தி மாதலீச்சரம் நிறுவிப் போற்றி இந்திரனுக்கு முன்னினும் இனியனாயினன். மாசாத்தன் தளிப் படலம் முற்றிற்று., ஆகத் திருவிருத்தம்-1868 அனந்த பற்பநாபேசப் படலம் அறுசீரடி யாசிரிய விருத்தம் வருவினை தெறுமா சாத்தன் தளிஒளி மங்க ளேசம் திருவிரா மேசம் மாத லீச்சரந் தெளியச் சொற்றாம் திருவலர் நிரந்த முன்றின் மாதலீச் சரத்தின் மேல்பால் ஒருவில்சீர் அனந்த பற்ப நாபத்தின் உண்மை சொல்வாம். 1 | |