ஆங்குப் பிறங்கொளியால், கண்ணிசைந்த களிசிறப்ப அகத்தியேசங் கண்டணைந்தாள். 183 பண்ணமைந்த பாடல் வண்டு பாடுதற் கிடனாகிய பூக்களைக் கொண்ட பொய்கையாகிய குளிர்ந்த சிவகங்கை எனும் ஒலிக்கும் அலைகளையுடைய தீர்த்தத்தில் மூழ்கித் திளைத்து பெண்ணியல்பமைந்த பேரழகினையுடைய பெருமாட்டியார் அங்கே விளங்கொளியால் கருத்திற்கியைந்த களி துளும்ப அகத்தியர் அருச்சித்த அகத்தியே சத்தினைக் கண்டு நெருங்கினர். மேற்படி வேறு என்ற சூதனை மாதவர் யாவரும் ஏத்தியே பன்றி காணருஞ் சேவடிப் பற்றிய சிந்தையோய் துன்று சீர்மை அகத்தியே சத்தியல் சொல்கென நன்றும் உள்ளம் மகிழ்ந்து விளங்க நவிற்றுவான். 184 | கூறிய சூத புராணிகரை முனிவரர் யாவரும் துதி செய்தே திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியைப் பற்றிய சிந்தையோரே! அடுக்கிய சிறப்பினையுடைய அகத்தியேசத்தின் பெருமையைச் சொல்லுக என்று வேண்டப் பெரிதும் மனம் மகிழ்ந்து விளக்கமாக உணர்த்துவார். நாரதர் செயல் கடவுள் மாமுனி நாரதன் முன்னொரு காலையின் இடனு டைத்திருக் காஞ்சியின் ஏகம்ப நாதரைச் சுடரும் மாடக யாழிசை யால்தொழு தேத்துவான் தடவு வெள்ளிப் பருப்பத நின்றுந் தணந்தனன். 185 | தெய்வ முனிவரராகிய நாரதர் முன்னோர் காலத்தில் பரவிய இடமுடைய கச்சித் திருவேகம்ப நாதரை விளங்கும் முறுக்காணியொடு கூடிய மகதியாழ் கொண்டு தொழுது துதி செய்யும் பொருட்டுப் பெருமை பொருந்திய கயிலை மலையினின்றும் நீங்கினர். அண்ண லார்தம் அடியிணை தைவரு சிந்தையான் நண்ணு கின்ற நரப்புக் கருவித் தலைவனை விண்ணின் நோக்குபு வெய்தென விந்த நெடுங்கிரி எண்ணம் வாய்ப்ப இயங்கும் உருக்கொடு முன்னுறா. 186 | பெருமானார் தம் துணையடிகளை மெத்தென வருடுகின்ற மனத்தை யுடையவராய் அணுகுகின்ற யாழுக்குரிய நாரதரை வானிடத்தே கண்டு விந்தமலையானது கருத்து நிறை வெய்த உலவும் வடிவங் கொண்டு விரைந்து முன் சென்று, |