73. பண்டொரு நாளுன் மன்னன் பகைத்துமீன் கொடியு யர்த்த தண்டமிழ் வழுதி யான சம்பரப் போரில் தோல்வி உண்டுள முழல வேநீ யுதவியப் போரில் வென்றி கொண்டதற் குவந்து மன்னன் கொடுத்தபே றிரண்டுண் டன்றோ. 74. தெருண்டநல் லறிவு வாய்ந்த தேமொழிக் கிளிவா யாம்பல் மருண்டமான் விழிப்பொற் பாவாய் மன்னவன் தன்பா லந்த இரண்டுபேற் றினையுங் கொள்வா யிலையிலை யெனவே மண்ணிற் புரண்டடி யிணையிற் செங்கை பூணினுங் கலங்க வேண்டா. 75. பாட்டளி முரலு மைம்பாற் பாவையே அப்பே றொன்றால் நாட்டைவிட் டின்றே யந்த ராமனைப் பதினான் காண்டு காட்டினுக் கோட்ட வேண்டுங் கன்னியுன் மகற்குப் பட்டஞ் சூட்டிட வேண்டு மொன்றால் என்றுநீ துணிந்து சொல்லாய். 76. பழமொழிக் கிளியே நாடு பரதனுக் குரிய தென்னும் கிழமையை யெடுத்துக் கூறிக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளும் ஒழிதரும் பதினான் காண்டி லுரிமையும் உறுதி பெற்று வழிமுறை யுரிமை பூண்டு பரதனும் மன்னி வாழ்வான். 77. கொடியனீங் கிருப்பின் நாட்டுக் குடிகளைத் தூண்டி விட்டுக் கெடுபிடி செய்வான் வஞ்சன் கெட்டவன் பரதற் கம்மா முடிவுகண் டாலுங் காண்பான் மொய்குழல் உனது காதற் குடையவன் பசப்புச் சொல்லுக் குருகியே மாற வேண்டா. 78. தோழியிவ் வாறு சொல்லத் தோகைகை கேசி அன்னாய் வாழியென் மகனை வாழ வைத்தனை மகன்றாய் நீயே கோழைநா னல்லேன் மன்னன் கொடுமையைத் தகர்ப்பேன் வாழி தோழிநீ யெனவே வாழி தோழியென் றிரண்டு பேரும். ------------------------------------------------------------------------------------------- 73. பேறு - வரம். சம்பரன் - விந்த நாட்டின் ஒரு பகுதியை யாண்ட பாண்டிய மன்னன். சீதை துயருறு படலம் 100 - 103 செய்யுட்களைப் பார்க்க. | |
|
|