நாடு என்ற அதிகாரத்தின் முதற் பாடலில் ‘தள்ளா விளையுள்’ பற்றிக் கூறிய வள்ளுவர், அடுத்துத் தக்கார் என்று கூறுவதன் மூலம் இக்கருத்தை வலியுறுத்துகின்றார். விளைச்சல் முதலியவற்றை 1,2,6,8 ஆகிய குறட்பாக்களில் (இயற்கை வளம்) பேசிய வள்ளுவர் ஏனைய பாக்களில் மக்கள் (மன) வளத்தையே பேசுகிறார். சிறந்த நாடு மண் வளத்தால் தள்ளா விளையுள் பெற்றிருப்பது போல மக்கள் மன வளம் இயல்பாகப் பெற்றிருக்கவேண்டும். அதனைத்தான் நாடா வளம் என்று சொல்லுகின்றாரோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. எத்துணை வளம் இருப்பினும் மக்கள் மனவளம் இல்வழி அது பயனற்றதாகும் என்று கருதிய தமிழர் அந்த இயற்கை வளத்துக்குக்கூட மக்கள் மனவளமே காரணம் என்று கருதினதாக நினைக்க முடிகிறது. ‘சாலி நெல்லின் சிரைகொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆகக் காவிரி புரக்கும் நாடு கிழவோனே’ (பொருநர். 246-8) இவ்வடிகள் இவ்வாறு நினைக்கத் தூண்டும். ‘ஆக’ என்ற வினை எச்சம் புரக்கும் என்ற பெயரெச்சத்தோடு இயைவதைப் பார்த்தால், இந்த விளைச்சலுக்குக் காரணம் சோழனுடைய ஆட்சிச் சிறப்பே என்று ஆசிரியர் பெற வைக்கிறார் என்பது தெரிகிறது. இக்கருத்துகளை யெல்லாம் நன்கு ஜீரணித்துக்கொண்ட கம்பநாடன் சங்கப் புலவர்களும் ஏனையோரும் காணாத ஒரு கற்பனை நாட்டை - 15, 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமஸ் மூர் காண முயன்ற நாட்டைப் படைக்க முயல்கிறான். நாட்டின் சிறப்பைக் கூறும்பொழுது மண்வளத்தைவிட, மக்கள் மனவளத்தைப் பெரிதாகப் பாடிய புறப்பாடலோ, திருக்குறளோகூட, கம்பன் மக்களின் தலையாய பண்பு என்று முதல் பாட்டிலேயே, பெரிதாகப் போற்றும் ஒரு பண்பைச் சுட்டிக் காட்டியதாகத் தெரியவில்லை. உட்பகையின்மை, மடியின்மை, பெருமுயற்சி என்பனவற்றை அடிப்படைப் பண்புகளாக நாட்டு மக்களின் இலக்கணமாகக் |