சோழர் காலத் தொடக்கத்தில் வாழ்ந்த கம்பநாடன் நன்கு அறிய முடிந்தது. வள்ளுவன் அமைக்காத முறையில், சங்கப் புலவர்கள் கற்பனை செய்யாத வகையில் நாடு நகர் பற்றிக் கூறத் தொடங்கும் பொழுதே, ‘பொறிகள் புறஞ்சொலா’ மக்கள் வாழ்கின்ற கோசலம் என்று அமைக்கின்றான். அப்படிப்பட்ட மக்கள் நிறைந்திருந்தார்கள் என்று சொன்னால்-இந்த நாட்டுக்கு வேறு உயர்வு சொல்ல வேண்டிய தேவையே இல்லை. மண்வளம், நிலவளம், விளைபொருள் வளம், கனிவளம் முதலானவற்றையெல்லாம் பின்னே விரிவாகப் பேசப்போகின்ற கம்பநாடன் எடுத்த எடுப்பிலேயே நம்முடைய கண்ணைத் திறக்கும்படியாக ‘அம்பும் நெறியின் புறம் செலாக் கோசலம்’ என்று சொல்வதன் மூலம் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டுமென்று எடுத்துக்காட்டுகிறான் என்று நினைக்க வேண்டியுள்ளது. பல பாடல்களில் இயற்கை வருணனையை ஈடு இணையின்றிப் பேசுகிறான் கம்பன் என்பதனை அறிவோம். அவற்றுள் இரு பாடல்கள் நம் சிந்தனையைத் தூண்டுவனவாகவே உள்ளன. ‘சேல் உண்ட ஒண்கணாரில் திரிகின்ற செங்கால் அன்னம் மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை கால் உண்ட சேற்றுமேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த பால் உண்டு, துயில, பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை’ ‘ஈரநீர் படிந்து இந்நிலத்தே சில கார்கள் என்ன வரும் கருமேதிகள் ஊரில் நின்று கன்று உள்ளிட மென்முலை தாரை கொள்ளத் தழைப்பன சாலியே’ - (கம்பன் - 44, 56.) இவ்விரு பாடல்களும் நாட்டு நடையில் ஒரு சிறப்பான பகுதியைக் குறிக்கின்றன. மேய வந்த எருமைகள், நன்கு மேய்ந்த பிறகு ஊரில் உள்ள தம் கன்றுகளை நினைக்கின்றன. அந்நினைவு தோன்றியவுடன் அவற்றின் மடியிலிருந்து பால் சுரக்கின்றது. இவ்வாறு ஒழுகிய பால் அன்னத்தின் மழலைப் பிள்ளை உண்பதற்கும், சாலி நெல் நன்கு தழைத்து வளர்வதற்கும் காரணமாக அமைகின்றது. |