வரும் வாழ்வின் குறிக்கோள் ஆகக் கருதுவது வீடுபேறே ஆகும். (கம்பன். 98) கற்றோர், கல்லார், நல்லோர், தீயோர், உடையார், இல்லார் ஆகிய அனைவருக்கும் புகலிடமாக அமைவது செங்கண்மால் திருவடியே ஆகும். அச்செங்கண்மாலே தன் இருப்பிடத்தை விட்டு இங்கு வந்து பிறந்து அளப்பருங் காலம் வாழ விரும்பினான் என்று கூறுமுகத்தால் குறிக்கோள் தன்மைபெற்ற நாட்டை, நகரத்தைத் தான் அமைத்த முறை சரியானது என்று காட்டுவதுபோலச் செங்கண்மால் வந்து வாழ்ந்த இடம் இது’ என்று கூறுகிறான். (98) கடவுள் இங்கு வந்து பிறந்தான் என்று கூறாமல், கடவுளே இங்குப் பிறக்க விரும்பினான் என்று கூறும் வகையில் நாட்டு, நகரச் சிறப்பை ஒப்பற்றதாக ஆக்கிக் காட்டுகிறான். நான்கு பிரிவுகளாகப் பால காண்டத்தைப் பிரித்தபோது இரண்டாவது பிரிவாகத் திரு அவதாரப் படலம், கையடைப் படலம், தாடகை வதைப் படலம், வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம் - இந்த ஆறும் ஒரு தொகுதியாக வந்ததைக் கண்டோம். இதனால் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். முதல் தொகுதியான நான்கு படலங்களிலேயே காப்பிய நாயகன் பேசப்படவில்லை. ஏனென்றால், திரு அவதாரத்திலிருந்துதான் காப்பிய நாயகனைப் பற்றிய பேச்சுத் தொடரும். திரு அவதாரப் படலத்தில் காப்பிய நாயகன் பிறந்தான் என்று சொல்லிய பிறகு அவனுடைய பிள்ளைப் பருவத்தைச் சில நூறு பாடல்களிலாவது பாடியிருக்கலாம். என்ன காரணத்தாலோ கவிச்சக்கரவர்த்தி பாடவில்லை. நான்கைந்து பாடல்களில் தசரத குமாரனைப் பதினாறு வயது இளஞனாக ஆக்கிவிடுகிறான். பல கதைகள் கம்பனைப் பற்றி வழங்குகின்றன. அவற்றில் ஒன்று அவனுக்கு அம்பிகாபதி என்கிற ஒரு மகன் இருந்தான் என்றும், அவன் கம்பன் காலத்திலேயே அவன் கண்ணெதிரில் அரச தண்டனை பெற்று உயிர் இழந்தான் என்றும் சொல்கிறார்கள். ஒருவேளை அந்தக் கதை உண்மையாக இருக்கக்கூடுமோ என்று கூடத் தோன்றுகிறது. அப்படியானால் குழந்தைச் செல்வத்தினிடத்திலே அவன் மனத்தில் ஆழமாகத் தோன்றிய வடு இராமனைக் குழந்தையாக வைத்துப் பாடுவதற்கு இடந்தரவில்லையோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. |