நாரதன் வரவு - மனு, சதரூபன் ஆகியோர் தவமும் வரமும், பிரதாப பானுவின் வரலாறு, இராவணனின் பிறப்பும், தவமும், வரமும், கொடுமையும், பூமி தேவியின் முறையீடு, திருமால் அவதாரம் எடுக்க இசைதல் எனப் பல செய்திகள் 44 முதல் 187 வரையிலான ஈரடிப்பாக்களில் பேசப்படுகின்றன. 188 முதல் 361 வரையிலான எஞ்சியுள்ள (காண்டத்தில்பாதிக்கும் குறைவான) 174 ஈரடியில் இராமனின் பிறப்பு முதலான பாலகாண்டச் செய்திகள் பேசப்படுகின்றன. இடைக்காலன் புராணங்களின் செல்வாக்கையும், பிற்கால வழிபாட்டு, பிரச்சார பக்தி இயக்கத்தின் தாக்கத்தையும் துளசி ராமாயணம் தெற்றென விளக்குகிறது, பால காண்டத்தைப் பொறுத்த வரையில், வான்மீகி கம்பன், துளசி, பாஸ்கரர், நரஹரி ஆகிய கவிஞர்கள் தம் காண்டப் பொருளை எவ்வாறு அமைத்து உள்ளனர் என்பதை அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை விளக்குகிறது. காப்பிய நோக்கம் குறிக்கோள் மனிதன் ஒருவனைப் படைத்துக் காட்டுவதை வான்மீகி இராமாயணம் நோக்காக உடையது. பாகவத புராணம், நரசிம்ம புராணம், அத்யாத்ம ராமாயணம், அற்புத ராமாயணம், வசிஷ்ட ராமாயணம் ஆகியன இராமனைத் திருமாலின் அவதாரமாகக் கருதி அவன் தீயவர்களை அடக்கி நல்லவர்களைக் காப்பதற்காக மேற்கொண்ட அவதாரச் செயல்களை விளக்கி, ஆன்மீக உணர்வுகளை ஊட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மானுடக் காப்பியம் என்னும் நிலையில் இருந்து விலகிப் புராணப் பாங்கு உடையனவாக இவை இயற்றப் பெற்றுள்ளன. தசரத ஜாதகம், தசரத கதனம் என்னும் பௌத்த நூல்களும், விமலசூரியின் பௌம சரிதம், இரவிசேனரின் பத்மபுராணம், குணபத்ரனின் உத்தரபுராணம், கன்னட பம்ப ராமாயணம் ஆகிய சமண நூல்களும் தத்தம் சமயப் பேருண்மைகளைக் கடைப்பிடித்தொழுகும் குறிக்கோள் பாத்திரமாக இராமனைப் படைத்துக் காட்டுகின்றன. பாடு பொருளில் வான்மீகியின் மூலக் கதையிலிருந்தும், பாகவத புராணம் முதலான வடமொழி இராமாயணக் கதைகளிலிருந்தும் இவை பெரிதும் வேறுபடுகின்றன. காப்பிய மாந்தர்களின் பெயர்களை மட்டும் மாற்றாமல், காப்பிய நோக்கம், கதை நிகழ்ச்சிகள், காப்பிய மாந்தர்களின் தோற்றம், காப்பிய |