இராமாயணத்தைப் பாடியுள்ளேன். எனவே, இம்மை மறுமைப் பயன்களை அடையும் சாதனமாகிய இப்புண்ணிய சரிதத்தில் காணப்படும் குறைகளைக் கவிஞர் பெருமக்கள் எண்ணிப் பார்க்கலாகாது’ என்று கூறும் பகுதி அவையடக்கமாக அமைகிறது. கன்னட பம்பராமாயணத்தில் அவையடக்கப் பகுதி இல்லை. தொரவெ இராமாயணத்தில் அவையடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது. தொரவையின்கண் எழுந்தருளியுள்ள நரகரியைத் (விஷ்ணு) தலைவனாக உடைய இக்காப்பியத்தை நான் பாடியிருக்க, இதனை ஏற்றுக் கொள்ளாதார் யார்? இக்காப்பியத்தின் நடை, சுவை (மெய்ப்பாடு), சொல்லாட்சி, கருத்து, அலங்காரம் என்பவற்றை அமைத்துப் பாடுவதில் கன்னடக் கவிஞர்கள் யாரையும் நான் பின்பற்றவில்லை. இதுவே என்னுடைய பெருமை. (1. 1-9) நான் ஒரு முறை எழுதியதைத் திரும்பப் பார்ப்பதில்லை; மீண்டும் பார்த்துத் திருத்த வேண்டிய அவசியமில்லை. இது எனக்குரிய பெருமை. (1. 1-10) பாரதம் எழுதத் தகுதியானவர் குமார வியாசர். அதுபோல இராமாயணம் எழுதத் தகுதியானவர் குமார வான்மீகிதான். வேறு யாருளர்? ( VI, 55-68) கன்னட மொழியில் உள்ள மற்றக் கவிஞர்கள் எல்லாம் சொல் வறுமை உடையவர்கள் (சப்த தரித்திரரு); யாப்பு, அலங்காரம், சுவை (மெய்ப்பாடு) என்பன பற்றி ஏதுமறியார். (VI, 55-68) மலையாள மொழியில் அமைந்த கன்னச ராமாயணத்தின் ஆசிரியராகிய இராம பணிக்கர் தம் காப்பியத் தொடக்கத்தில் பின்வறுமாறு கூறுகிறார்: இராமாயணக் காப்பியம் இயற்றும் தகுதி எனக்கில்லை. எனினும், அதிகம் படிக்காத பாமர மக்களுக்காக நான் இதை எழுதுகிறேன். கற்றுத் துறைபோய அறிஞர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வான்மீகியின் வழிநின்று நான் இதை எழுதினாலும் வான்மீகியின் காப்பியத்தைப் போன்று இது சிறப்புடைய தன்று. கருடன் பறப்பதற்கென்று அமைந்த உயர்ந்த வானத்தில் ஒர் ஈ பறக்க விரும்பியதைப்போல, வான்மீகியின் நாவால் உரைக்கப்பட்ட மகிமை உடைய இராமன் கதையை நானும் சொல்ல விழைந்துள்ளேன். |