கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வடமொழியிலோ, வட இந்தியாவின் பிற மொழிகளிலோ சங்கு சக்கர அவதாரக் கருத்து காணப்பெறவில்லை என்னும் கமில் பல்கியின் கூற்றை நோக்குமிடத்துக் கி. பி. 9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற கம்ப ராமாயணத்தில் இக்கருத்து (1,5:22) காணப்படுதல் எவ்வாறு என்னும் வினா எழுகிறது. இக்கருத்தமைந்த பாடலை வழக்கு மிகுதி பற்றி நூலுள் தந்திருந்தாலும், அதன் பொருத்தமின்மை நோக்கிச் சென்னைக் கம்பன் கழகப் பதிப்பு இப்பாடலை வாட்குறியிட்டு வேறுபடுத்திக் காட்டுகிறது, உதார ராகவத்திலும், அத்யாத்ம ராமாயணத்திலும் உடையவரின் விசிட்டாத்துவக் கோட்பாட்டின் செல்வாக்கு தெளிவாகக் காணப்படுகிறது.12 வடமொழி வாயிலாக உடையவர் தரிசனம் அறிஞரிடையே பரவியபோது இந்நூல்களும் போற்றப் பட்டிருக்கலாம். அதன் விளைவாகப் பின்னர் வந்த தென்னாட்டுத் தலை முறையினர் அத்யாத்ம ராமாயணத்தின் கருத்தைத் தம் இலக்கியங்களிற் புகுத்தியிருக்கலாம். எழுத்தச்சனின் மலையாள அத்யாத்ம ராமாயணம் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக அமைகிறது. எனவே, சென்னைக் கம்பன் கழகப் பதிப்புக் குழுவினரின் கொள்கை ஏற்புடையதாகலாம் என்னும் கருத்து வலியுறுகிறது. பாயசப் பங்கீடு: பாயசப் பங்கீடு இறையருளை உட்கொண்ட நிகழ்ச்சியாகலின், பௌத்த ஜைன ராமாயணங்களில் இக் குறிப்பு இடம் பெறவில்லை. அவதாரப் பிறப்பினை அருட்பிறப்பாக ஏற்றுக்கொண்ட இராமாயண நூல்களிடையே பாயசப் பகுப்பின் விகித அளவு, பாயசம் பெற்றோரின் வரிசை முறை ஆகியவற்றில் வேறுபாடு காணப்படுகிறது. விகித அளவைப் பொறுத்த வரையில், கோசலைக்கு 1/2, சுமித்திரைக்கு 3/8, கைகேயிக்கு 1/8 பாகம் என்ற அளவில் தரப்பட்டது என்று வான்மீகமும், கோசலைக்கு 1/4, கைகேயிக்கு 1/4, சுமித்திரைக்கு 1/2 பாகம் என்று அத்யாத்ம ராமாயணமும் கூறுகின்றன. அரசியர் மூவருக்கும் மூன்று பங்கையும் பின்னர்ப் பிதிர்ந்து வீழ்ந்த மிச்சத்தை மீண்டும் சுமித்திரைக்கும் அளித்தான் என்று கம்பன் கூறுகிறான். இதில் விகித அளவு தெளிவாகப் புலப்படவில்லை. தெலுகு மொழியின் ரங்கநாத ராமாயணமும் பாஸ்கர ராமாயணமும் வான்மீகத்தைப் பின்பற்றி
12. vEck!lkn lqeu] rqylh dkO;&fpUru (vyhxM+ % !Fku] I` % 112-113) |