வாக உரைத்து, இராமனை நோக்கி விசுவாமித்திரர், “இராம, இத்தகைய முனிவரின் ஆசிரமத்திற்குள் வந்து அகலிகையைச் சாபக் கொடுமையினின்று மீட்பாயாக” என்றார். மூவரும் ஆசிரமத்துள் நுழைந்ததும் அதுவரை யாருக்கும் புலப்படாமல் இருந்த அகலிகை அவர்கள் கண்களுக்குப் புலப்பட்டாள். அப்போது இராம இலக்குவர்கள் இருவரும் அவள் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர். கௌதமர் கூற்றை நினைவுகூர்ந்த அகலிகை அவர்கட்கு அதிதி பூசை செய்து மகிழ்வித்தாள். அப்போது அங்கு வந்த கௌதமரின் ஆசியையும், மரியாதையுடன் கூடிய உபசரிப்பையும் பெற்று மகிழ்ந்தவர்களாய் மூவரும் மிதிலை நோக்கிச் சென்றனர். (1. 49:13, 14, 18, 19, 20, 24) பௌத்த, ஜைன ராமாயணங்கள் அகலிகை வரலாற்றை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டன. கம்பன் காப்பியப்படி மிதிலை நோக்கி மூவரும் சென்று கொண்டிருக்கையில் ஓராசிரமத்துக்குள் நுழைகிறார்கள். அப்போது இராமனின் திருப்பாதத் துகள்பட்டு வழியில் கிடந்த ஒரு கல் பெண்ணுருவாக மாறி வழியின் ஒரு புறத்தே ஒதுங்கி நின்றாள். இதைக் கண்டு பெரிதும் வியப்பெய்திய இராமனை நோக்கி விசுவாமித்திரன் ‘இவள் அகலிகை, கௌதம முனியின் மனைவி’ என்றான். அதனைக் கேட்ட இராமன், “என்னே இவ் உலக இயற்கை! அன்னை போல்வாளுக்கு இத்துன்பம் ஊழ்வினையால் நேர்ந்ததா அன்றி இம்மைக் குற்றங்களால் நேர்ந்ததா” என்று வினவினான். அப்போது இந்திரனால் குற்றப்பட்ட வரலாற்றையும், அதனால் இருவரும் கௌதமனால் சபிக்கப் பெற்ற வரலாற்றையும் விசுவாமித்திரன் விளங்கக் கூறினான். அதனைக் குறித்து வருந்தல் வேண்டா; மாதவன் கருணைக்குப் பாத்திரமாகும் வண்ணம் நடந்து கொள்வாயாக; போய் வருக” என்று அருளலும் அகலிகை அவனை வணங்கிக் கௌதமனிருப்பிடம் நோக்கிச் சென்றாள். (1. 9: 14-25) தெலுகு இராமாயணங்கள் மூன்றிலும் வான்மீகத்தைப் போலவே அகலிகை வரலாறு கூறப்படுகிறது. மூன்றிலும் இந்திரன் சேவல் வடிவம் கொண்டு பொய்யாகப் பொழுது புலர்தலைக் காட்டிக் கௌதமன் காலைக்கடன்களுக்காக வெளியே செல்லுமாறு செய்கிறான். நீவு இந்துருடு அவுட்ட எருகுதாமே இந்து ரம்மனு ஜலஜாக்ஷி தமபர்னசால லோபலகி பலபேதி கொனி போயி |