கயவன் என்பதை உணர்ந்து கொண்ட பின்னர் விதிர்த்து, அழுந்து, எதிர்த்து, விலகாமலும், ‘தக்கது அன்று’ என்று சிந்திக்காமலும் அவனுடன் இருத்தலை விரும்பித் தொடர்ந்த மனமுடையவளாகக் கம்பனின் அகலிகை படைக்கப்பட்டுள்ளாள். கம்பனின் மாற்றம் குற்றத்தின் கடுமையைக் குறைக்கவும், குற்றத்திற்கு அடிப்படையான மன விகாரத்தை நீக்கவும் பயன்படுகிறது. எனினும், நெஞ்சினால் பிழைப்பிலாள் என்னும் தொடர் அகலிகைக்குப் பொருந்துவதாகத் தோன்றவில்லை; கம்பனின் கருத்தாகவும் படவில்லை. ஏனெனில், “மனைவிக்குரிய மாண்புகளை அழித்து அதனால் இழிதகைமை பூண்ட (கௌதமனின்) மனைவி” (1. 9:13) என்றும், “நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும்பழி பூண்டாள்” (1.9:20) என்றும் விசுவாமித்திரனின் வாக்காகவும், “விலைமகள் அனைய நீயும்” என்று கௌதமனின் வாக்காகவும், குறிப்பிடும் கவிஞன், பின்னர் :நெஞ்சினால் பிழைப்பிலாள்” என்று விசுவாமித்திரன் வாக்காகவே கூறுவானா என்பது சிந்திக்கத் தக்கது. மேலும், இந்தப் பாடலை உடுக்குறியிட்டுக் கம்பன் கழகம் பதிப்பித்துள்ளது. வை.மு.கோ.வும் இந்தப் பாடல் சில பிரதிகளில் இல்லை என்று கூறுகிறார். அகலிகை கல்லுருவம் அடைந்த வரலாற்றைக் கூறும் பரிபாடல் அடிகளுக்கு (19:50-52) உரைவகுக்கும் பரிமேலழகர், “கல்லுருவெய்தியவாறு இதுவென்று கொண்டோற் பிழைத்த தண்டம் கூறுவாருமாய்” என்று கூறுவதால், அகலிகை குற்றப்பட்டுத் தண்டனை பெற்றாள் என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார் என அறிகிறோம்.23 (a) “தேக சௌந்தர்யமும் தேவர்களுக்குரிய தேஜசும் உடைய வேற்று ஆடவரைக் கண்டால் காம வயப்படுதல் மகளிர்க்கு இயல்பு” என்னும் கோணிகாபுத்திரரின் கருத்தை மேற்கோளாகக் காட்டும் வாத்சாயனர், இவ்வாறு ஆசை நாயகனை வைத்திருந்த ஒரு பெண்ணாக அகலிகையைக் குறிப்பிடுகிறார் என்பதும் இங்குக் கருதத் தக்கது.23 (b) எனவே, இந்தப் பாடல் கம்பன் பாடலாக இருக்குமா என்னும் ஐயம் எழுகிறது. கற்பு என்னும் ஒழுக்க நிலையில் ‘மிக்க கற்புடையவள், சிறிது கற்புடையவள்’ என்னும் விழுக்காட்டுத் தன்மையையோ, ‘அவளைவிட இவள் கற்பில் சிறந்தவள்’ என்பது
23. (a) பரிபாடல் மூலமும், பரிமேலழகருரையும் உ.வே. சாமிநாதையர், சென்னை:1935, ப.141. 23. (b) Biswanarayana Shastri, “Ramayana in Assamese Literature”.The Ramayana Tradition in Asia, P. 588. n.4. |