னகத்திலும், குறிப்பாகத் தமிழகத்திலும் பெயர்த்தெழுதப்பட்டு வராநின்ற வான்மீக ராமாயணங்கள் கம்ப ராமாயணத்தைப் பின்பற்றி அகலிகை கல்லாகச் சபிக்கப்பட்ட செய்தியை, ‘நிராஹாரா’ என்னும் சீருக்குப் பதிலாக ‘ஷிலா பூத்வா’ என்ற பாடத்தைத் தந்து புகுத்தின என்று துணிய வேண்டியுள்ளது. வாயு பக்ஷா என்றபோதே ‘காற்றை உணவாகக் கொண்டு’ என்னும் பொருள் தருவதால் ஆகாரம் எதுவுமின்றி எனப் பொருள்படும் ‘நிராஹாரா’ என்னும் சொல் மிகையாகப் படுகிறது. இதனாலும், கல்லுருவாய் என்னும் கூடுதல் செய்தியாலும் இந்தப் பாடத்தை இவை ஏற்றுக்கொண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இவ்வகையில் கம்பன் கருத்தே வான்மீகப் பாடமாக மாறியிருக்கலாமோ என்னும் ஐயம் வலியுறுகிறது. இந்திரன் சாப நீக்கம் பெற்றதை வடபுல, தென்புல வழக்கு வான்மீக ராமாயணங்கள் விரிவாகக் கூறுகின்றன. வான்மீகத்தை பின்பற்றும் தெலுகு கன்னட ராமாயணங்களும் இச்செய்தியைக் கூறுகின்றன. கம்ப ராமாயனம் இந்திரனின் சாப நீக்கம் குறித்துப் பேசவில்லை. சிறுபான்மை ஏடுகளில்மட்டும் காணப்பெற்ற இரண்டு பாடல்களைக் கம்பன் கழகப் பதிப்பு மிகைப் பாடல்களாகக் காட்டியுள்ளது. தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திரன் உடலில் தோன்றிய குறிகள் கண்களாக மாறும்படி கௌதமன் சாப நீக்கம் செய்ததாக இந்தப் பாடல்கள் கூறுகின்றன. துளசி ராமாயணமும் இந்திரன் சாப நீக்கம் பற்றிப் பேசவில்லை. இராமன் முதலானோர் கௌதம வனத்துள் புகுந்ததுமே அகலிகை தன்னுருவம் அடைந்து அவர்கள் கண்களுக்குப் புலப்பட்டாள் என்று எல்லா வான்மீக ராமாயணங்களும் கூறுகின்றன. கல்லாக இருந்தவள்மீது இராமனின் பாதத்துகள் பட்டுக் கல்லுரு நீங்கியதாக எந்த வான்மீகமும் கூறவில்லை. அதாவது, கல்லுருவாகச் சபிக்கப்பட்டாள் என்று கூறும் சில தென்புல வழக்கு வான்மீக ராமாயணங்கள் கூட (தர்மாலயா பதிப்பு போன்றன) இராமனின் பாதத்துகள் பட்டுச் சாபம் நீங்கியதாகக் கூறவில்லை.30 இது சிந்திக்கத் தக்கதாக உள்ளது.
30. இராமனின் பார்வைபட்ட அளவிலேயே அகலிகை கல்லுருவம் நீத்தாள் என்று வான்மீகி கூறுவதாகச் சீத்தாராமாச்சார் (குமாரவான்மீகி: ஓர் ஆய்வு (கன்னடம் பக். 150) கூறுகிறார். இவர் குறிப்பிடும் வான்மீகி ராமாயணம் எதுவெனப் புலப்படவில்லை. |