பெறலறும் பேறு. உரையாசிரியர்களை நெறிப்படுத்தியதோடு, முதன்மைப் பதிப்பாசிரியராகவும் அமைந்து இவ்விளக்க உரைப் பதிப்பைச் செம்மைப்படுத்தியுள்ள அவருக்குப் பொதுவாகத் தமிழர்களும் குறிப்பாகக் கம்பர் ஆர்வலர்களும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்களாவர். உரை எவ்வெவ்வாறு அமையவேண்டும் என்பது 16.5.1992இல் நடந்த அமைப்புக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பெற்றது. அந்த வழிகாட்டலை மனங்கொண்டு உரையாசிரியர் ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பப்பத்துப் பாடல்களுக்கு உரை எழுதி அனுப்புமாரு கேட்டுக்கொள்ளப்பெற்றனர். 1992 ஜுன் மாதம் 27, 28 ஆகிய இரண்டு நாள்களில் உரையாசிரியர்கள் இரண்டாம் முறையாகக் கூடினர். அவர்கள் எழுதிய உரைப் பகுதிகளைப் பேராசிரியர் அ.ச.ஞா. முதலிலேயே படித்துவந்தார்; கூட்டத்தில் ஒவ்வொருவர் உரையையும் வரிவரியாகப் படித்துத் திறனாய்வு செய்தார். இந்தத் திறனாய்வு விவாதத்தினால் விளக்கவுரையின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தெளிவாயிற்று. அதன்பின்னர் உரையாசிரியர்கள் பணியைத் தொடர்ந்து செய்தனர். முடிவு நிலையில் மீண்டும் பேரா. அ.ச.ஞா. வரிவரியாகப் படிக்கக் கேட்டு, வேண்டிய மாற்றங்கள் திருத்தங்கள் செய்தார். செந்தமிழ் வித்தகர்-திறனாய்வு வேந்தர்-கம்பன் கலை நிலை கண்டவராகிய அ.ச.ஞா.வின் நெறிகாட்டலிலும் பதிப்புப் பணியிலும் முடிவான வடிவைப் பெற்றதே இந்தக் கம்பராமாயண விளக்க உரை. உரையாசிரியர்களின் உரிமைக்கு ஊறு இல்லாமல் கவிச் சக்கரவர்த்தியின் கருத்துவளம் புலப்படும் வகையில் பதிப்புப் பணியை மேற்கொண்டது அ.ச.ஞா.வின் சிறப்பு. முன்னோடிகள் கோவை, கம்பன் அறநிலை வெளியிடும் இந்தப் பதிப்புக்கு முன்னும் பல உரைப் பதிப்புகள் வெளிவந்துள்ளன; மூலப் பதிப்புகளும் பல உண்டு. முன்னோர் செய்த பணிகளை நன்றியுணர்வோடு போற்றும் உரையாசிரியர்கள், தங்கள் தனித்தன்மை கெடாமலும் விளக்க உரையை வகுத்திருக்கிறார்கள். பல வகைகளிலும் இவ் விளக்க உரைக்குத் தனிச் சிறப்புகள் உண்டு என்பது |