மூலநூலின்படி,வாலி வலிமை பெற்றவனாயினும், வரங்கள் பெற்றவனாயினும் சாதாரணக் குரங்காகவே பேசப்படுகிறான். கம்பநாடனைப் பொறுத்தமட்டிலும், வாலி வதை பல சிக்கல்களை உண்டாக்கிவிடுகிறது. அறத்தின் மூர்த்தியாகிய இராகவன் வாலியைக் கொன்றால் ஒழிய, முனிவரிடம் வாக்குக் கொடுத்தபடி இராவணனைக் கொல்ல முடியாது. எனவே, வாலியைக் கொன்றே தீர வேண்டும். மரபுப்படி வாலியோடு போர் செய்வது என்பது இயலாத காரியம். எனவே, இரண்டு தீமைகளுள் குறைந்த தீமையை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான், (choose the lesser evil) என்ற முடிவுக்கு இராகவன் வந்தவிட்டான் என்பதைத்தான் 'வேறு நின்று ஏ விடத் துணிந்தது' என்ற அவன் சொற்கள் வெளிக்காட்டுகின்றன. இந்த நிலையில், வாலியின் குணநலத்தைக் காட்ட விரும்புகிறான் கவிச்சக்கரவர்த்தி, அவனைப்பற்றிய அனுமன் தந்த தகவல்கள் ஒரு சார்பு (biased conclusion) பற்றியன. அதனை அப்படியே நம்பித்தான் இராகவன் போருக்குத் துணிகிறான். அதை நாமும் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டால், வாலி என்ற பாத்திரப் படைப்பை நன்கு அறிய முடியாமல் போய்விடும். எனவேதான், வாலி வதைப் படலத்தின் முற்பகுதியில் வாலி - தாரை உரையாடலைப் புகுத்துகிறான் கம்பன். வந்திருக்கின்றவன் வலிய துணைவன் என்ற அளவில்தான் தாரை இராம - இலக்குவர்களைப்பற்றி அறிந்திருந்தாள். மேலும், இராமன் என்பவனைப்பற்றித் தன் கணவனுக்கு ஒன்றும் தெரியாது என்ற கருத்தில்தான் அவள் பேசுகிறாள். ஆனால், வாலியோ இராமனுடைய வரலாற்றை மிக நன்றாக அறிந்திருந்தான். இராகவனுடைய பண்புநலன்களைத் துல்லியமாக எடை போட்டு அறிந்திருந்தான் என்பதை (3965 முதல் 3969 வரை) ஐந்து பாடல்களில் விரிவாகக் கூறுகிறான். சுக்கிரீவனுக்குத் துணையாக இராகவன் வந்துள்ளான் என்று அவள் கூறியும், இராகவனைப் பற்றி இவ்வளவுஉயர்வாக வாலி பேசுகிறான் என்றால், அவனுடைய குணாதிசயங்களை விளக்கஇப்பாடல்கள் போதுமானவை யாகும். தன் மார்பில் அம்பு வந்து தைத்தபோதுகூட, அது இறைவனின் சூலமோ,முருகனின் வேலோ என்று ஐயுறுகிறானே தவிர, அந்த நேரத்தில் கூடஇராகவனை அவன் நினைக்கவில்லை. தன் மார்பை துளைத்துச் செல்ல முற்படும் அம்பை வாலினாலும் கைகளினாலும் பற்றிப் பிடித்து வெளியே இழுத்து அதில் பொறிக்கப்பட்ட பெயரை அறிய முற்படுகிறான் வாலி. அம்பைநிறுத்தி ஓரளவு வெளியே இழுத்து அதில் பொறிக்கப்பட்ட 'செம்மைசேர்நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்'. 'கண்களில் கண்டான்' |