வாளியால் அறிவு தந்தாய்' என்று பேசுகிறான். அம்புதான் கொன்றது என்று நினைத்திருந்தால் ஆவி போக்கும் வேலைவாய் என்று சொல்லியிருக்க வேண்டும். அதற்கு மாறாக, ஆவி போம் வேலை என்று கூறியதால் இவ்உலகை விட்டுப் போக வேண்டிய நேரம் வந்தவிட்ட காரணத்தால் என் ஆவி போகின்றது. இதற்கு இராமன் எய்த அம்பு காரணம் அன்று என்பதை 'ஆவிபோம் வேலைவாய்' என்ற சொற்களால் நன்கு தெரியப்படுத்தி விடுகிறான்.அப்படியானால் இராமன் எய்த அம்பு என்ன செய்தது. இராகவன் ஏவியகூர்வாளி அறிவு (பர ஞானம்) தந்து அருளியது. 'அருளினாய்' என்ற சொல்லை அவன் பயன்படுத்தும்போது ''கண்ணுற்றான் வாலி'' என்ற பாடலில் காணப்படும் வாலிக்கும் இப்பாடலில் காணப்படும் வாலிக்கும்; மலைக்கும் மடுவுக்கும் இடையே காணப்படும் வேற்றுமையை அறியலாம். ''ஏவுகூர் வாளியால் ஆவிபோம் வேலைவாய் அறிவு தந்து அருளினாய்''என்ற சொற்றொடர்களை வாய்விட்டு உரக்கப் படித்தால்-பல முறைபடித்தால் - அத்தொடரில் மறைந்துள்ள ஓர் உணர்ச்சி வெளிப்படக் காணலாம்.ஆழ்ந்த வருத்தம் அல்லது ஏக்கம் இத்தொடரில் தொனிப்பதை உணரவும் -அறியவும்கூட - முடியும். மனம் முற்றிலும் மாறி, விருப்பு வெறுப்பற்ற மிகஉயர்ந்த நிலையை, ஸ்திதப் பிரக்ஞை மனநிலையை அடைந்தபிறகு வாலிபேசும் வார்த்தைகள் இவை. இந்த மனநிலையை அடைந்துவிட்ட ஒருவன்எப்படி ஏக்கத்தோடு பேசமுடியும் என்ற வினாத் தோன்றுவது இயல்பே. சமதிருஷ்டி நிலையை வாலி அடைந்துவிட்டான் என்பதைக் கவிஞன் இங்கே,எப்போது, எவ்வாறு தெரிவிக்கிறான்? அறிவு தந்து அருளினாய் என்றவாலியின் கூற்று முற்றிலும் உண்மையானதே என்பதை இச்சொல்லை அடுத்துவரும், மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! (4063) என்ற அடிகள் மூலம் நிலைநாட்டுகிறான். இந்த நிலையை அனுபவ ரீதியில் அடைந்த ஒருவன் எப்படி ஏக்கத்தோடு பேச முடியும்? என்றாலும், இப்பாடலின் முன்னிரண்டு அடிகளில் ஓர் ஏக்கம் தொனிப்பது மறுக்க முடியாததாகும். அந்த ஏக்கம் எதுவாக இருக்கும் என்று ஆராயத் தொடங்கினால், விடை காண்பது எளிது. 'அறிவு தந்து அருளினாய்' என்ற சொற்களில் தன் தகுதியைப் பாராது அறிவை (பர ஞானத்தை)த் தன் கருணைகாரணமாகத் இறைவன் அளித்தான் என்று சொல்கிறான். இதில் ஏக்கம் எங்கேவந்தது? இந்தப் பர ஞானத்தைப் பெற்ற பிறகு - அதாவது சம திருஷ்டி,விருப்பு வெறுப்பற்ற நிலை பெற்ற பிறகு ஒரு மனிதன் |