பேரறிவு படைத்தவனாகிய வாலி, இராகவனை யாரென்று உணர்ந்துகொண்டான். அதே கணத்தில் தன் தம்பியையும் அறிந்தவன். ஆதலால், தன் உயிர் போவதற்குள் தன் தம்பிக்குப் பிறர் புகட்ட முடியாத நல்லறிவைப் புகட்ட விரும்புகிறான். பகைமை உணர்ச்சி அறவே நீங்கிவிட்ட நிலையில் தன் தம்பியாகிய சுக்கிரீவனை, ''வன் துணைத் தடக் கை நீட்டி வாங்கினன் தழுவி, மைந்த! 'ஒன்று உனக்கு உரைப்பது உண்டால்; உறுதி அஃது உணர்ந்துகோடி''; என்று சொல்லத் தொடங்கினான். தான்சொல்லப் போகும் உறுதிப் பொருளை அறிவு கொண்டு ஆராய்ந்து பயனில்லை. அதனை உணர்ந்துகொண்டால் தவிர, கடைப்பிடிக்க முடியாதாதலால் 'உணர்ந்து கோடி' என்று கூறத் தொடங்குகிறான். நான்கு, ஐந்து பாடல்களில் அவன் கூறப்போகும் உறுதிப் பொருள் வெறும் சாத்திரங்களைப் படித்ததாலோகற்றாரை அண்டிக் கேட்டதாலோ கிடைத்தது அன்று. இராமன் அன்பின்மூலம்புகட்டிய ஞானமாகும் இது. பன்னூறு ஆண்டுகள் வாழ்ந்து அன்றாடம் எட்டுத்திக்குகளிலும் சென்று அட்டமூர்த்தியாகிய பரம்பொருளை மன, மொழி,மெய்களால் வழிபட்டு அதன் பயனாக இப்பொழுது பெற்ற அறிவாகும்(ஞானம்) இது. தான் ஒருவனாகவே பாற்கடலைக் கடைந்து அமிழ்தத்தைஎடுத்தாலும், நன்று எனத் தான் உண்ணாமல் தேவருக்கு ஈந்த பரோபகாரச்சிந்தையால் வாலிக்கு இந்த விநாடி கிடைத்தற்கரிய பர ஞான அனுபவம்கிடைத்துள்ளது. மேலே கூறிய எச்செயலையும் செய்யாதவன் சுக்கிரீவன், இன்ப வேட்டையிலும், நறவம் மாந்திப் புலன்கள் தரும் இன்பத்திலும் இருக்கின்றவன்ஆவான். எனவே, அவனாகத் தன் சுய முயற்சியால் இந்த அனுபவத்தைப்பெற முடியாது. இதனை நன்குணர்ந்த அண்ணனாகிய வாலி தம்பியின்மாட்டுக்கொண்ட பரம கருணையால் ஐந்து பாடல்களில் இவ் அருங்கருத்தை விளக்கத்துவங்குகிறான்: மறைகளும் முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத் துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், துணி வில் தூக்கி, அறைகழல் இராமன் ஆகி, அறநெறி நிறுத்த வந்தது; இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய். (4073) இப்பாடலின் கடைசி அடி தன் தம்பியின் குணநலன்களைத் துல்லியமாக எடைபோட்டிருந்தான் வாலி என்பதை அறிவிக்கின்றது. இராமனைத் தனக்குத்துணையாக வந்த வலிமை மிகுந்த அரச குமாரன் என்றுமட்டுமே கருதியிருந்தான் சுக்கிரீவன். ''மழக்கை யிலங்கு |