துணையாக வரமாட்டான் என்ற உறுதிப்பாடு (conviction) வாலியின் மனத்தில்ஆழமாகப் பதிந்துவிட்டது. இந்த முடிவுடன் போர் செய்கின்ற வாலிக்கு மார்பில்பாய்ந்த அம்பில் 'இராம' என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது எல்லையற்ற அதிர்ச்சியை தந்தது. தன்னால் கோபுரத்தின் உச்சியில் வைத்து வணங்கப்பட்ட இராமன் என்னும் மனிதன் வீழ்ச்சியுற்றுவிட்டானே என்று எண்ணுகிறான் வாலி. இராமனைப்பற்றி அவனுடைய தீர்மானம் இப்படி நொறுங்கும் என்று அவன் கனவிலும் கருதவில்லை. இதனால் ஏற்பட்ட மாபெரும் அதிர்ச்சியே (major shock) வாலியை நிலை குலையச் செய்துவிட்டது. தன்னால் பெரிதும் மதிக்கப்பட்ட இராமன் இப்பொழுது மாறிவிட்டதை அவனால் தாங்கவேமுடியவில்லை, என்னசெய்வது என்று புரியாத நிலையில், இராமன் மறைந்துநின்று அம்பு எய்ததும்கேலிக்கு இடமாக அமைந்துவிட்டது. 'தம்பியும் தானும் எதிர்ந்த போரிடைஅம்பு இடை தொடுக்குமோ; தொடுக்கமாட்டான்' என்ற முடிவோடு வந்தவனுக்கு அம்பு இடையே தொடுக்கப்பட்டது முதல் அதிர்ச்சி; அதுவும் மறைந்துநின்று தொடுக்கப்பட்டது இரண்டாவது பேரதிர்ச்சி. இந்த இரண்டு அதிர்ச்சியும் சேர்ந்து வாலியை நிலைகுலையச் செய்து, இவ்விரண்டிற்கும் காரணமான இராமன் எதிர்ப்பட்டவுடன் இருபது (4014 முதல் 4033 முடிய) பாடல்களில் எள்ளி நகையாடச் செய்கிறது. அவற்றுள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகள் மிக இன்றியமையாதவை: தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ (4018-3) தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும், செய்கை (4020-4) இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப்பிழை கண்டாய்? அப்பா! (4021-3) மெலியவர் பாலதேயோ, ஒழுக்கமும் விழுப்பம்தானும்? (4022-3) ........... ''இலங்கை வேந்தன் முறை அல செய்தான்'' என்று முனிதியோ? - முனிவு இலாதாய்! (4024-3-4) ஒருவர்மேல் கருணை தூண்டி, ஒருவர்மேல், ஒளித்து நின்று வரிசிலை குழைய வாங்கி, வாய்அம்பு மருமத்து எய்தல் தருமமோ?............... (4025-2-4) |