இப்பாடலில், வாலியின் மனமாற்றம் பேசப்படுகிறது. இராமனை இதுவரை இழித்தும் பழித்தும் பேசிக்கொண்டும் விடை கூற முடியாத சங்கடமான வினாக்களைத் தொடுத்தும் இராம - இலக்குவர்க்குப் பிரச்சினையை உண்டாக்கிக்கொண் டிருந்த வாலி, திடீரென்று மனம் மாறி, இதுவரை தான் சென்ற திசையிலிருந்து நேர் எதிர்த் திசையில் செல்லத் தொடங்குகிறான். இப்பாடலின் முதலடியில் வரும் 'அன்ன கட்டுரை' கருத்துள் கொண்டான் என்ற சொற்றொடருக்கு இப்பதிப்பின் உரை கண்டவர்கள் உள்படஅனைவருமே ' இலக்குவன் கூறிய சொற்களைக் கருத்துள் வாங்கிக்கொண்டான்' என்றே பொருள் கொண்டனர். இவர்கள் கூறும் பொருளை ஏற்றுக்கொண்டு வாலியின் வளர்ச்சியைக் காண்பதே பின்வரும் சிலபக்கங்களில் பேசப்படுகின்றன. இலக்குவன் கூறிய விடையைப் பொருத்தமற்றது என்ற அடிப் படையிலேயே இதுவரை வாலியின் செயல் ஆயப்பெற்றது. அது காரணமாகவே, 'அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்' என்ற தொடருக்கு இலக்குவன் கூறிய சொற்களைக் கருத்துள் கொண்டான் என்று பிறர் கூறும் பொருளை மறுத்து 'அன்ன கட்டுரை' என்பதை இராமன் கூறிய சொற்கள் எனப் பொருள் கூறப்பெற்றது. இவ்வாறு பொருள் கொள்ளாமல் 'அன்ன கட்டுரை' என்பதற்கு இலக்குவன் கூறிய சொற்கள் என்றே டாக்டர் திரு. ம. ரா. போ. குருசாமி கூறியுள்ளார். அவர் கருத்தை ஏற்றுக்கொண்டால் அதற்குரிய விளக்கம் வருமாறு: மார்பில் அம்பு எய்யப்பெற்ற வாலி புறத்தே இராமனை ஏசினாலும் அகத்தே ஞானம் பெற்று விரைவாக வளர்கிறான் என்று கூறும் கருத்தை இவரும் ஏற்றுக்கொள்கிறார். அந்த நிலையில் இராமனுடைய அம்பு 'ஸ்பரிச தீட்சை' செய்வித்தது. கார்முகில் கமலம் பூத்து நின்ற வடிவம் 'நயன தீட்சை' நல்கியது. இவை இரண்டும்போக வாலியின் செவிகளில் இலக்குவனால் மந்திர தீட்சையும் செய்யப் பெற்றது என்று கூறுகின்றார். இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டு இந்த ஆசிரியன் தரும் விளக்கம் வருமாறு: மந்திர தீட்சை என்று கூறியவுடன் ஏதோவொரு குறிப்பிட்ட மந்திரத்தைத்தான் கூறவேண்டும் என்பது பொருளன்று. ஆன்மாவின் பக்குவத்திற்கு ஏற்ப இந்த உபதேசம் எந்தச் சொல்லாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனையோரைப் பொறுத்தமட்டில் அச்சொற்கள் வாலாயமாக வழங்கும் பொருளைத் தரலாம். ஆனால் அதே சாதாரணச் சொற்கள் சீடனின்பக்குவத்திற்கேற்ப மந்திரமாக மாறிவிடும். இது ஆன்மீகவாதிகள் அறிந்தஒன்றாகும். அருணகிரி நாதரைப் பொறுத்தமட்டில் குருவாக வந்த பெருமான்செய்த உபதேசம் |