இவ்வாறு இலக்குவன் கூறிய அடுத்த விநாடியே வாலி சிறியன சிந்தியாதவனாகி முழுவளர்ச்சி பெற்று, சம திருஷ்டி உடையவனாகி மாறி ஸ்திதபிரக்ஞ மனநிலையை அடைந்தவன் ஆகிவிட்டான். மறைந்து நின்று ஏன்அம்பு எய்தாய் என்ற வினாவிற்கு விடை எதிர் பார்க்கும் நிலையில் இப்பொழுது வாலி இல்லை. அந்த வினாவே பொருளற்ற வினாவாகமாறி விட்டது. இந்நிலையில் அடுத்த பாடலில் வாலியின் மனமாற்றமும், அதற்கு அடுத்த பாடலின் ஆன்மீக வளர்ச்சி பெற்ற வாலியின் சொற்களும் கவிஞனால்பேசப்படுகின்றன. கவி குலத்து அரசும் அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்; அவியுறு மனத்தன் ஆகி, 'அறத்திறன் அழியச் செய்யான் புவியுடை அண்ணல்' என்பது எண்ணினன் பொருந்தி, முன்னே செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சி, சொன்னான். (4060) தாய் என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும் நீ என நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே? தீயன பொறுத்தி' என்றான் - சிறியன சிந்தியாதான். (4061) உலகிடைத் தோன்றிய எல்லா உயிர்களும் எடுத்துக் கொண்ட உடல் காரணமாக அந்தந்த உயிர்களின்மேல் அன்பு செலுத்துகின்றன. செலுத்தப் படும்இவ்வன்பு காரணமாக இந்த உயிர் நற்கதி அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அன்பு செலுத்தப்பட வேண்டும். அரும்பாடுபட்டுப் பலபிறவிகளில் தவம் முதலிய பலவற்றைச் செய்து உயிர்க்கு உய்கதி நாட வேண்டிவரும். இது தான் அனைவரும் அறிந்த வாழ்க்கை முறை. இவ்வாறில்லாமல் சில உயிர்கட்குச் சில நேரங்களில் ஒரு ஒப்பற்ற வாய்ப்புக் கிடைக்கிறது. எந்தப் பரம்பொருளை அடைய உயிர் பல்வேறு முயற்சிகளைச் செய்கிறதோ அந்தப் பரம்பொருள் அதிர்ஷ்டவசமாகத் தானே இறங்கிவந்து (அவதரித்து) அந்த உயிரின்முன் நிற்கின்றது. இதிலொரு துரதிருஷ்டம் என்னவென்றால் பல பிறவிகளிலும் தான் தேடும் அப்பொருள்தான் இப்பொழுது தன்முன்னே நிற்கின்றது என்பது அறிய அஞ்ஞானத்தால் மூடப்பெற்ற அந்த ஆன்மாவுக்கு வாய்ப்பில்லாமல் போகின்றது. கிடைத்தற்கரிய இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்ட ஆன்மா பின்னர் வருந்துகிறது. ''பிற்பால் நின்று பேழ் கணித்தால் பெறுதற்கரியன் பெம்மானே'' என்று மணிவாசகர் இந்தப் பரிதாப நிலையைச் சுட்டிக்காட்டுகிறார். இந்த இக்கட்டான நிலையில் குரு அருள் முன்னின்று எதிரே நிற்பவன் யார் என்பதை விளக்கி உடனே அவனிடம் உன்னை அடைக்கலமாகத் தந்துவிடு என்று குறிப்பால் உணர்த்துகிறது. அப்படிப்பட்ட |