கூறினோம். அகமனத்தின் ஆழத்தில் உணர்வுகளின் மோதலில் நான்கு காரணங்களில் மனம்போக, எஞ்சிய சித்தம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று காரணங்களும் ஒருமுகப்பட்ட நிலையில் 'இராம' என்று சொல்லும், அந்தச் சொல்லின் வண்ணமான நீலக் கார்முகில் கமலம் பூத்து வரிவில் ஏந்தி மண்ணில் வந்த காட்சியும் வாலியை மாற்றத் தொடங்கி ''அன்ன கட்டுரை கருத்துள் கொண்டான்'' என்று கூறப்பெறும் அந்த விநாடியில் வாலியை முழுவதுமாக மாற்றிவிட்டன. இந்த மாற்றம் புறமாற்றமோ, செயற்கை மாற்றமோ, அரைகுறை மாற்றமோ அன்று; மீளமுடியாத முழுமாற்றம் இது. இத்தகைய மாற்றம் பெற்றவர்கள், மாற்றம் பெறுவதற்குமுன் காணுகிற காட்சிக்கும், பெற்றபின் காணுகின்ற காட்சிக்கும் கடல் அனைய மாறுபாடு உண்டு என்று கூறினோம். இப்புதிய காட்சியில் பழமையிற் கண்ட பகைமை, சிறுமை, அற்பத்தனம், நியாயமற்றது, கொடுமை என்பனவெல்லாம் மாறிவிடுகின்றன. பகைமை என்ற ஒன்றோ, கொடுமை என்ற ஒன்றோ இவற்றின் மாறாக நட்பு என்ற ஒன்றோ, நன்மை என்ற ஒன்றோ தனியே ஒன்றுஇல்லை என்பதை இக்காட்சி கண்டவர்கள் அறிய முடியும். இது எவ்வாறுஎன்பதையும், இது இயலுமா என்பதும் புரிந்துகொள்வது கடினம். ஓர்உதாரணத்தின்மூலம் ஓரளவு விளங்கிக் கொள்ளலாம். சென்னை போன்ற பெருநகரத்தின் நடுவே நிற்கின்ற ஒருவன் வானளாவிய கட்டடங்களையும், அதனையடுத்து உள்ள உயரம் குறைந்த கட்டடங்களையும் காண முடிகின்றது. ஒரே இடத்திலும் அகல நீளங்களிலும் ஒன்றிற்கொன்று முற்றிலும் மாறுபட்டு மனத்தில் வேறுபாட்டு உணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றது. இரண்டு கட்டடங்களில் ஒன்றை மிக உயர்ந்தது என்றும், மற்றொன்றை மிகக் குட்டையானது என்றும், ஒன்றை நீள அகலங்களில் மிகப்பெரியது என்றும், மற்றொன்றை மிகக் குறுகியது என்றும் அறிகிறோம். இவை அவனுடைய கற்பனை அன்று; உண்மையே ஆகும். ஆனாலும் அதே மனிதன் ஜெட் விமானத்தில் ஏறி நாற்பதினாயிரம் அடி உயரத்தில் பறக்கும்பொழுது இதே கட்டடங்களைக் காண நேர்ந்தால் வியப்படைவான். எல்லாக் கட்டடங்களும் ஒரே உயரமும், ஒரே அகல நீளமும் பெற்றிருப்பதாகத் தெரிவதைக் காண முடியும். முன்னர்க் கண்டதும் உண்மைதான்: இதுவும் உண்மைதான். வேறுபாடு எங்கே நிகழ்ந்தது? தரைமட்டத்தில் இருக்கும்பொழுது காணப்பட்ட வேறுபாடுகள், விமானத்தில் பறக்கும் பொழுது மறைகின்றன. உலகியல் நிலையில் அறிவை மட்டும் வைத்துக்கொண்டு, தன்பலத்தை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருந்த வாலி, சராசரி மனிதனாவான். அந்நிலையில் அறம் - மறம், நேர்மை - நேர்மை |