ஒருவனே அறிய முடியும். ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குற்றங்களில் கன்மம், மாயை என்ற குற்றங்கள் வாலியைப் பற்ற வில்லை. ஆனால், அவனையும் அறியாமல் அகந்தை என்ற கிழங்கு அவனுள் வேரோடித் தழைத்து நின்றது. வேரோடிய இந்த அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் பணியைத்தான் இராகவன் ஏவிய கூர்வாளி செய்தது. இக்கிழங்கு எடுபட்டவுடன் தன்னை நாய் போன்றவன் என்ற கருத்தில், 'நாய் என நின்ற எம்பால்' என்று பேசத் தொடங்குகிறான். இந்த மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது என்பதை - வாலியின் காட்சியில், எண்ணத்தில், சொல்லில் இம்மாறுபாடு தோன்றிவிட்டது என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் 'சிறியன சிந்தியாதான்' என்ற ஒரே தொடரில் விளக்கிக் காட்டிவிடுகிறான். பெரிய கோடு என்ற ஒன்றை நினைத்துப் பேசுகின்றோம். அக்கோடு தனியே இருக்கும் வரையில்தான்; அக்கோட்டின் பக்கத்தில் அதைவிடப் பெரிய கோடு வரையபட்டவுடன் இதுவரை எதனைப் பெரிய கோடு என்று கூறினோமோ, அதுவே சிறிய கோடு ஆகிவிடுகிறது. உண்மையில் முதல் கோட்டில் மாற்றமில்லை; நம் பார்வையில் வேறொரு கோட்டின் வரவால் மாற்றம் ஏற்படுவது தான் அதனைச் சிறிய கோடு என்று அழைப்பதற்குக் காரணமாகும். அதேபோலப் பகையின்றி அம்பு எய்தல், சோதரர் சண்டையுள் குறுக்கிடு தல், ஒருவன் பேச்சைமட்டும் நம்புதல், மறைந்து நின்று அம்பு எய்தல் ஆகிய செயல்கள் மன மாற்றம் ஏற்படுவதற்கு முனனர் உள்ள வாலிக்கு மிகப் பெரியனவாகக் காணப்பட்டன. ஆனால், அக்கட்டுரை மனத்துள் கொண்டு ஆன்மீகத்தில் 'மாலென' வளர்ந்துவிட்ட வாலிக்கு இதே செயல்கள் மிகச் சிறியனவாகவும், அர்த்தமற்றவையாகவும் மாறிவிட்டன. கிட்கிந்தா காண்டத்தின் உயிர்நாடியாக உள்ள வாலிவதைப் படலத்தில் கல்வி, கேள்வி, தவம், ஆற்றல் ஆகிய அனைத்தும் நிரம்பப்பெற்று இவற்றின் விளைவாலேயே ஆணவத்தால் மறைப்புண்டு கிடக்கும் ஓர் ஆன்மாவின் வளர்ச்சி, விடுதலை என்பவற்றை வாலியைக் கொண்டு விளக்க முற்படுகிறான் கவிஞன். ஆன்ம விடுதலைக்கு இறுதியாகத் தடையாக நிற்பது ஆணவமே ஆகும். இறையருள் குருவடிவாக வந்து பரிசம், நயனம் முதலிய ஏதாவதொரு வழியில் தீட்சை செய்தவுடன் ஆணவம் கரைந்துவிடுகிறது. அதனாலேயே 'நாய் என நின்ற எம்பால்' என்ற வாலி பேசுகிறான். அதிகாரத்தின் எல்லையில்நின்றவர்கள் காப்பிய உலகில் வாலியும், வரலாற்று உலகில் மணிவாசகரும்ஆவர். முதலமைச்சராக இருந்து மணிவாசகரைத் திருப்பெருந் துறையில்இறைவன் ஆட்கொண்ட |