50

கொண்ட அங்கதனுக்கோ, 'நீ இது பொறுத்தி' என்ற சொற்களின் ஆழமும்,
பொருட் செறிவும் தெரிந்திருக்கா என்று நினைய வேண்டியுள்ளது.  ஆனால்,
இச்சொற்கள் யார் காதில் விழவேண்டுமென்றும், யார் மனத்தில் துயரம் நீங்க
வேண்டு மென்றும் பெருமான் நினைத்தானோ அந்த வாலியின் காதில்
இச்சொற்கள் அமுததாரை போல் வீழ்ந்தன.  இச்சொற்கள் காதில் வீழ்ந்த
அந்த விநாடியே மன அமைதி பெற்றவனாய் வாலி வானுக்கு அப்புறத்தன்
ஆகிவிட்டான்.  வாலியை அல்லாமல் இச்சொற்களின் பொருளைத்
தேவர்களும் அறிந்தனர். அதனாலேயே இராகவன் 'நீ இது பொறுத்தி' என்று
கூறியவுடன் 'உலகம் ஏழும் ஏத்தின' என்று கவிஞன் பாடுகிறான்.
சாதாரணமாக உடைவாளைத் தந்து 'நீ இதை வைத்துக் கொண்டிரு' என்று
கூறியிருந்தால், உலகம் ஏழும் இராமனை ஏத்திப் புகழ வேண்டிய சூழ்நிலை
ஒன்றும் இல்லை என்று எளிதில் யூகிக்கலாம். 'பொறுத்தி' என்ற சொல்லுக்கு
'வைத்துக்கொள்' என்று பொருள் கூறிவிடக் கூடாது என்பதற்காகவே உலகம்
ஏழும் ஏத்தின என்று கவிஞன் தொடர்ந்து கூறுகிறான்.

     'பொறுத்தி' என்ற சொல்லுக்கு இதுதான் பொருள் என்பதையும்
பொறுத்தருள்க என்ற பொருளிலேயே கவிஞன் இச்சொல்லைக் கையாள்கிறான்
என்பதையும் துணிந்து கூறக் கம்பநாடனின் மற்றொரு பாடல் துணைபுரிகிறது.
தான் செய்யும் வேள்விக் காவலுக்கு இராமனை அனுப்புமாறு விசுவாமித்திரன்
தசரதனிடம் கூற முற்பட்டு, 'நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி' (324) எனக் கேட்டான்.  அதனை மறுத்த தசரதன்,
'நானே வந்து காவல் புரிகிறேன்' என்கிறான்.  அதனைக் கேட்ட
விசுவாமித்திரன் மிக்க சினம் உடையவனாய், புருவங்கள் மடிய, உதடுகள்
துடிக்க, திசைகளும் மருள, கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான்.
நிலைமையை உணர்ந்து குலகுரு வாகிய வசிட்டன் கூறும் வார்த்தைகளைக்
கம்பன் பாடலில் காண்கின்றோம்.

கறுத்த மா முனி கருத்தை உன்னி, 'நீ
பொறுத்தி' என்று அவற் புகன்று, 'நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?' எனா, வசிட்டன் கூறினான்                  (328)

கறுத்த மாமுனி கருத்தை உன்னினான் வசிட்டன் என்று கவிஞன் கூறுவதால்,
சினத்தின் உச்சியில் நின்ற விசுவாமித்திரன் தசரதனைச் சபித்துவிடுவானோ
என அஞ்சிய வசிட்டன், விசுவாமித்திரனை நோக்கிப் 'பொறுத்தி நீ' எனக்
கூறுகின்றான்.  'நீ இதனைப் பொறுத்தருள்வாயாக' என்பதே இதன்
பொருளாகும்.  அறியாமை காரணமாகவும், பிள்ளைப் பாசம் காரணமாகவும்
தசரதன் செய்த