55

இருப்பின் தொண்டு செய்ய இயலாது. எனவே, இவர்களைப்பற்றிக் கூறவந்த
இப்புறப்பாடல் ''இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும், நன்று எனத் தமியர்
உண்டலும் இலர்'' எனக் கூறுகிறது. அதாவது, தேவர்களுக்குரிய
கிடைத்தற்கரிய அமிழ்தமே கிடைத்தாலும்கூடப் பிறர்க்குத் தராமல்
தாங்களாகவே அதனை உண்ண மாட்டார்கள். வலிமையான முயற்சியை
யுடையவர்கள் உழைக்கவும் செய்பவர்கள். ஆனால், இந்த உழைப்பு, முயற்சி
என்றவற்றின் பலன்களைத் தமக்கு என்று கொள்ளாமல் பிறருக்காகவே
அர்ப்பணிக்கின்றவர்கள். இவர்களே தொண்டர்கள் என்று புறப்பாடல்
கூறுகின்றது. ஆறாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் வாழ்ந்த திருநாவுக்கரசர்
''என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்று தொண்டின் பெருமை
பேசுகின்றார். தொண்டு வாழ்வே அனுமன் வாழ்வு என்பதைச் சுவாமி
விவேகானந்தரும் விளக்கியுள்ளமை இங்கே நினைக்கத் தக்கது.  ...கரும
வீரமாவது தன்னலம் கருதாது பிறர் நன்மையின் பொருட்டே கருமத்தில்
இறங்குதல் என்பர். பயன் நோக்காது செய்யும் பணி தெய்வ வழிபாடு என்பர்.
இவருடைய பக்தி மதுர பாவனை யன்று; அனுமான் காட்டிய பக்தி
வீரமேயாகும். ஞானத்தில் வீரம் காட்டுவது தன் முத்தியை நாடாது
பிறருடையபிறவித்தளைகளை அறுப்பதே என்று மொழிவர்.

                                - விவேகானந்த ஞான தீபம் பக். xv

     மேலும் விவேகானந்தர் கூறுவது:  . . . . அனுமாரை ஒரு
கோணத்திலிருந்து நோக்கினால், அவர் சேவை என்னும் உயர்ந்த
கொள்கையே உருவானாற்போலக் காணப்படுகிறார்.

                                                   க்ஷ v பக். 218

     சங்க காலத்தில் தொடங்கிப் பாரதியார் காலம்வரை தமிழர்களால்
போற்றிப் பேசப்படும்.  தொண்டு என்ற பண்பிற்கு வடிவு கொடுத்தவன்
கம்பநாடனே ஆவான்.  வடிவு கொடுப்பதிலும் ஒரு தனிச்சிறப்பைக்
காண்கிறோம்.  எதிலும் நிலையில்லாமல் தாவித் திரியும் மனப்பான்மையைக்
குரங்கு மனப்பான்மை என்று கூறுவது மரபு.  அப்படியிருக்கக் குரங்குப்
பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு, தொண்டு என்னும் பண்பிற்கு ஒரு
வடிவமாக அமைத்து விட்டான் கவிச்சக்கரவர்த்தி.  இராமபிரானுக்குத்
தொண்டு செய்தவர்கள் மிகப் பலர் ஆவர்.  மிக முக்கியமாகக் கருதப்பட
வேண்டிய இலக்குவன், குகன் சுக்கிரீவன், அனுமன் ஆகிய நால்வருள்ளும்
தொண்டின் சிறப்பைக் காண முடிகிறது.  இராம அனுஜனாகிய இலக்குவனைப்
பொறுத்தமட்டில் அவன் தொண்டின் ஆழத்தில் 'நான்' என்பது தலை
நிமிர்ந்து நிற்கக்காணலாம். கைகேயியையும், பரதனையும் கொன்று, பட்டத்தை
இராமனுக்குத் தருகிறேன்