என்னும்போதும், காட்டிலுள்ள தங்களை வெல்லப் பரதன் வருகிறான் என்று இராமனை எதிர்த்துப் பேசும்போதும் அவனது தொண்டிற்குச் சிறிது குறை ஏற்பட்டுவிடுகிறது. குகனது தொண்டு ஈடு இணையற்ற தாயினும் இராமனை யாரென அறிந்துகொள்ள முற்படாது தாய் அன்புபோல் உள்ள தொண்டாகும். அறிவினால் ஆய்ந்து பார்க்கும் இயல்பு அவனிடம் இல்லை. சுக்கிரீவனைப் பொறுத்தமட்டில் தொண்டு செய்வதாக நினைத்துக்கொண்டு தேவையற்ற இடங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டு இராகவனுக்கே பிரச்சினையை உண்டாக்கும் தொண்டனாவான்அவன். ஆனால், அனுமனுடைய தொண்டு தனியான ஒன்றாகும். 'நான்' என்ற அகங்காரத்தையும், 'எனது' என்ற மமகாரத்தையும் அறவே போக்கியவன் அனுமன். இவன் 'கல்லாத கலையும் வேதக் கடலுமே இல்லை' (3768) என்றும் 'உலகுக்கெல்லாம் ஆணி' (3769) என்றும், 'நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும், கோட்படாப் பதமே ஐய! குரக்கு உருக் கொண்டது' (3783) என்றும் இராமனால் வருணிக்கப்படும் பாத்திரம் ஆவான். கோட்படாப்பதம் என்று இராமபிரானால் வருணிக்கப்படுதலின் இப்பாத்திரம் யான், எனது என்று செருக்கறுத்த பாத்திரமேயாவான். குகனும் செருக்கறுத்த பாத்திரம்தான் என்றாலும், செருக்கைத் தரக்கூடிய கல்வி, கேள்வி அவன்மாட்டு இல்லை. ஆனால், அனுமனைப் பொறுத்தமட்டில் கலைக்கடல், வேதக் கடல் ஆகியவற்றைக் கரைகண்டவன் என்று வேத நாயகனே கூறுகிறான். அப்படியிருந்தும் அதனால் பெறும் செருக்குச்சிறிதுமின்றி ஒரு தொண்டனாக வாழ்கிறான் என்றால், அவனைப் படைப்பதன் மூலம் தொண்டு என்றபண்பிற்கே ஒரு வடிவம் தந்துவிடுகிறான் கம்பநாடன் என்பதை அறியமுடிகிறது. சுக்கிரீவன் உயிர் வாழ்வதற்கும் இராமன் உதவியை நாடுவதற்கும் அவன் மூலமாகத் தாரத்தோடு தலைமையும் பெறுவதற்கும் காரணமாக இருந்தவன் அனுமன் ஒருவனே ஆவான். அனுமனுடைய அபர ஞானம், பரஞானம் என்ற இரண்டும் எத்தகையது என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கோடிட்டுக் காட்டிவிடுகிறான். தூரத்தே வரும் இராம - லக்குவரைக் கண்டு ஓடி மலை முழைஞ்சில் ஒளிந்துகொள்கிறான் சுக்கிரீவன். அவனுக்கு ஏவல் கூவல் பணி செய்பவன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அனுமன் மறைந்துநின்று இருவரையும் நோக்குகிறான். வருகின்றவர்களுடைய அங்க அடையாளங்கள் சாமுத்திரிகா லட்சணம், அவர்கள் பாதம் பட்டவுடன் பூமியில் தோன்றும் மாறுதல்கள், அவர்கள் |