உடம்பு பட்டவுடன் பட்டுப்போன கிளைகளும் துளிர்விடுதல் என்பவற்றை யெல்லாம் கண்டு, அவர்களைப்பற்றிய சில முடிவுகளுக்கு வருகிறான். இன்னும் அண்மையில் வந்தவுடன் அவர்கள் முகத்திலுள்ள உணர்ச்சிகளைக் கொண்டே உயிரினும் சிறந்த பொருளை இழந்துவிட்டு அதனைத் தேடி வருகின்றவர்கள் என்ற முடிவுக்கு வருகின்றான். மறைந்திருந்து காணும்போதும் தன் கூரிய பார்வையால் (observation) இத்துணை முடிவுகளுக்கும் வருகினற ஒருவனைத் தொண்டன் என்று கூறுவதா, அமைச்சன் என்று கூறுவதா, ஞானி என்று கூறுவதா, இவையனைத்தும் ஒன்று சேர்ந்த வடிவம் என்று கூறுவதா என்பதில் நமக்கே ஐயம் ஏற்படுகிறது. மூவர் என்றும், மும்மூர்த்திகளோ என்றும் (3755) முதலில் ஐயுற்றுப் பின்னர்த் தேவர்கள் அல்லர், மானுடரே; ஆயினும் சிந்தனைக்கு உரிய பொருள் ஒன்றை இழந்து தேடுகின்றனர் (3756) - தருமத்தின் வடிவான இவர்கள் அருமருந்தனைய ஒன்றை இழந்து தேடுகின்றனர் (3757)- சினத்தை வென்றவர்கள் - கருணையில் கடல் அணையர் - இதமான பண்பு உடையவர்கள் இவர் - இந்திரன் அஞ்சும் வலிமையுடையவர் மன்மதனையும் வெல்லும் அழகுடையவர் (3758) - புலி முதலிய கொடிய விலங்குகளும் மயில் முதலிய பறவைகளும் இவர்கள்மாட்டு அன்பு செய்து உருகுகின்றன - (3760 - 61) நெருப்பைக் கக்கும் கற்கள் இவர்கள் பாதம் பட்டவுடன் மலர்கள் போன்று மென்மை அடைகின்றன. (3762) என்றெல்லாம் கணிக்கிறான். இங்குக்கூறப்பட்ட அனைத்தும் அவன் கூரிய பார்வையில் கண்ட நிகழ்ச்சிகள் ஆகும். இந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் கண்ட மெய்ம்மைகளின் பட்டியலாக (statement of facts) அடுக்கிவிடுகிறான் வாயுவின் மைந்தன். இந்த மெய்ம்மைகளிலிருந்து ஒரு முடிவை வடித்து எடுப்பது (deduction from these facts) எளிதன்று. திடீரென்று புறத்தே காணப்பட்ட இந்நிகழ்ச்சிகள் தன்னையும் தன் புறமனத்தையும் அகமனத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிவு கொண்டு ஆராய்வது மட்டுமல்லாமல் தன் உணர்வை எவ்வாறு தாக்குகின்றன என்பதையும் உணர்ந்தபிறகே ஒரு முடிவுக்கு வருதல் பொருத்தமாகும். இவ்வாறுதான் அனுமன் செய்தான் என்பதை அடுத்த பாடலில் கவிஞன் கூறும் நுண்மையான வாதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. துன்பினைத் துடைத்து, மாயத் தொல்வினை தன்னை நீக்கி, தென்புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ தாம்? (3763) இந்த முடிவுக்கு அனுமன் எவ்வாறு வருகிறான்? தம்மை அடைந்த வரின் துன்பங்களைப் போக்கி, அத்துன்பங்களின் மூலமான பழ வினைகளைப் போக்கி, சாதாரணமாக இறந்து எமலோகம் சேராமல் |