மூன்றாவதாக அனுமன் சந்திப்பது அங்காரதாரை எனும் அரக்கியை. இவளும் பெண்தான். அனுமனுடைய இயல்பை அறிந்திருந்த அங்காரதாரை தான் யார் என்பதை அனுமனுக்குக் கூறத் தொடங்குகையிலேயே 'பெண்பால் எனக் கருது பெற்றி ஒழி' (4821) என்று கூறிவிட்டாள். ஆதலின், அவள் வாயிடைப் புகுந்து குடலைக் கிழித்து வெளிவருவது அனுமனுக்கு எளிதாகிறது. இந்த இரண்டு செயல்களையும்செய்தபிறகு இது மாதிரி எத்தனை இடையூறுகள் வழியிலுண்டோ என்று நினைத்தான் அனுமன். அதே நேரத்தில் இந்த இரண்டு இடையூறுகளையும் தான் எவ்வாறு வெல்ல முடிந்தது என்று சிந்தித்தான். விடை எளிதாகக் கிடைத்துவிட்டது. வன்மையும், கொடுமையும் பூண்ட சுரசையும் அங்காரதாரையும் பின்னர் அவன் காணப்போகும் அரக்கர்களின் பிரதிநிதிகளாக இருந்தனர். இவர்களை வெல்ல முடிந்த தென்றால் அரக்கர் கோட்டைக்குள் புகுவதும் எளிதாகும். விண்ணுற உயர்ந்து மலையெனப் பெருக்கும் தன் உடல் ஆற்றலைமட்டும் நம்பி இவ் இருவரையும் தான் அழித்ததாக அனுமன் கருதவில்லை. இதன் பின்னே தனக்குத் தோன்றாத் துணையாக இருந்து, இவர்களை வெல்லுமாறு செய்தது எது என்ற வினாவை எழுப்பி விடை கூறுகிறான். தேறல் இல்அரக்கர் புரி தீமை அவை தீர, ஏறும் வகை எங்குஉளது ? "இராம" என எல்லாம் மாறும், அதின்மாறு பிறிது இல் என வலித்தான் (4828) என்ற கருத்தை அனுமன்இவ்வளவு துணிவோடு கூறுவதற்குக் காரணம் யாது என்று சிந்திப்போமே யானால், இந் நிகழ்ச்சிகட்குச் சற்றுப் பின்னர் அனுமன் கண்ட காட்சியே இந்த உறுதிப்பாட்டை அவனுக்குத் தந்தது. சடாயுவின் சகோதரனாகிய சம்பாதி (என்ற கழுகு) நீண்ட காலமாகத் தன் சிறகுகள் இரண்டும் அற்ற நிலையிலேயே இருந்தான். பன்னெடுங் காலமாகவும் அச்சிறகுகள் வளரும் வழியை அறிந்தான் இல்லை. மயேந்திர மலையில் அனுமன் முதலியோர் ஒன்றுகூடியபொழுது இராம நாமத்தின் மகிமையைச் சம்பாதி கூறினான். 'எல்லீரும்அவ் இராம நாமமே சொல்லீர்;சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா நல் ஈரப் பயன்நண்ணும்' (4695) என்று சம்பாதி கூறவும். |