30

மேலிருந்து, அரக்கியர்நடுவேயுள்ள பிராட்டியைக் கண்ட மாத்திரத்தில்,
அவள் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு முன்னரே அனுமன் அவள் யார்
என்பதுபற்றி ஒரு முடிவிற்கு வருகின்றான்.

     'அரவணைத்துயிலின் நீங்கிய
     தேவனே அவன்; இவள் கமலச் செல்வியே' (5134)

என்றமையால் காட்சி,அனுமானம் என்ற இரண்டையும் கொண்டு உண்மையாக
உள்ளவாறு அறியும் ஆற்றல் அனுமன்பால் இருந்ததைக் கவிஞன் காட்டிச்
செல்கிறான். அவன் மரத்தின்மேல் இருக்கும்பொழுதே இராவணன் வருதல்,
பிராட்டியிடம் கெஞ்சுதல், அவள் துயருறுதல், திரிசடை தேற்றுதல் ஆகியவை
இப்படலத்திலேயே நிகழ்கின்றன.

     இக்காண்டத்தில்நான்காவதாக அமைவது உருக்காட்டு படலம் ஆகும்.
துயரம் தாங்காமல் இனி மீளும் வழியே இல்லை என்ற முடிவிற்கு வந்த
பிராட்டி உயிரைவிடும் முயற்சியில் இறங்கிய அந்த விநாடியில் இராமன்
பெயரைக் கூறிக்கொண்டு கீழே குதித்த அனுமன் பிராட்டியின் உயிரைக்
காத்தான். இப் பேருபகாரத்தை நினைந்து அவனுக்கு நன்றி பாராட்டும்
முறையில் அந்தத் தாய், "உயிர் தந்தாய் உத்தம" (5297) என்றும் "அம்மை
ஆய், அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே" (5298) என்றும் "பாழிய
பணைத் தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே" (5299)
என்றும் நன்றி பாராட்டிவிட்டு, தாய் மகனை ஆசீர்வதிக்கும் முறையில்,
"உலகம் ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி" (5299) என்று
ஆசி வழங்கினாள். இந்த ஆசியே பிராட்டி அனுமனை எடை இட்டுவிட்டாள்
என்பதை அறிவிக்கின்றது. ஆசி கூறுபவர்கள் 'எல்லா நலன்களும் பெற்று
மேலும் வாழ்க, வளர்க' என்று கூறுவதுதான் மரபு. அங்ஙனமிருக்க 'இன்று
என இருத்தி' என்று பிராட்டி கூறக் காரணம் யாது ? உலக ஞானத்திலும்
மெய்ஞ் ஞானத்திலும் தவத்திலும் தான் அடைய வேண்டியது எதுவும் இல்லை
என்று வளர்ந்துள்ள ஒருவனுக்கு, வேண்டாமை யன்ன விழுச்செல்வம்
முற்றிலும் கைவரப்பெற்ற ஒருவனுக்கு, தொண்டு செய்து வாழ்வதே அன்றி
வீடும் வேண்டாம் என்று வாழும் ஒருவனுக்கு வேறு எத்தகைய ஆசியை
வழங்க முடியும் ?  அனைத்தும் நிரம்பியுள்ள அவனுக்கு மேலும் வந்து
சேரவேண்டியது ஒன்றும் இல்லையாதலால் 'இன்று என இருத்தி' என்று
வாழ்த்தினாள்.