நுழைபுலம் மிக்க மாருதி வீடணன் வீட்டைப் பின்வருமாறு வருணிக்கிறான்: | நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும் தந்தன கண்டிலேன், தரும தானமும் வந்தனை நீதியும், பிறவும், மாண்பு அமைந்து அந்தணர் மனை எனப் பொலிந்ததாம் அரோ. | (6461) | மேலே காட்டிய இரண்டு பாடல்களையும் வைத்துப் பார்த்தால், அந்தணர் இல்லம் எனப் பொலிகின்ற ஒரு வீட்டில், ஒளிந்து வாழ்கின்ற தருமமாக வீடணன் இருக்கின்றான் என்பதனை அறிய முடிகின்றது. | வீடணன் என்ற பாத்திரத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு வினாக்கள் இன்றும் வினவப்படுகின்றன. அண்ணனுக்குக் காட்ட வேண்டிய நன்றியை மறந்து, சந்தர்ப்பம் கிடைத்தபொழுது பகைவனிடம் சேரலாமா என்பது முதல்வினா. அப்படியே சேர்ந்தாலும் அண்ணனைக் காட்டிக்கொடுக்கின்ற முறையில் பல உளவுகளை இராமனுக்குக் கூறலாமா என்பது இரண்டாவது வினா. இவ்விரு வினாக்களுக்கும் விரிவாக விடை கூறுவதற்கு இங்கு இடமில்லை என்றாலும், சுருக்கமாகச் சில கருத்துக்களைக் காண்பது நலம். இலங்கை வாழ்க்கையோடு ஒட்டாத வாழ்க்கை வாழ்கின்ற வீடணன் காட்டில் உறைகின்ற தவசிகளைப் போல வாழ்ந்து வருகிறான். இங்ஙனம் வாழ்கின்ற ஒருவன் கொழுகொம்பு கிடைக்காமல் காற்றில் அலைப்புண்டு தள்ளாடும் கொடிபோன்றவன் ஆவான். அக் கொடிக்குப் பக்கத்தில் ஒரு கொழுகொம்பு கிடைக்கும்பொழுது 'அது எத்தகைய மரம், அதைப் பற்றிப் படருவது நலமோ' என்று கொடி சிந்திப்பதில்லை. அதே போல ஒளிந்து வாழ்கின்ற இந்தத் தருமம் சந்தர்ப்பம் வந்தபொழுது இருந்த இடத்தை விட்டுப் பெயர்ந்துவிடுகிறது. அதுவும் அவனாகப் பெயரவில்லை. "விழிஎதிர் நிற்றியேல் விளிதி" (6372) என்று இராவணன் கூறிய பிறகே வீடணன் இலங்கை விட்டுப் புறப்பட்டான். | புறப்பட்டு வானிடை நின்று, மறுபடியும் அண்ணனுக்கு ஓர் இறுதி எச்சரிக்கை செய்துவிட்டு, 'என் பிழை பொறுத்தி' (6376) என்று கூறிவிட்டுப் பெயர்கிறான். வானிடை |
|
|
|