இம்மூவரில் கும்பனும், இந்திரசித்தனும் பிழை ஏதும் செய்யாதவர்கள். ஏனைய எல்லா வகைகளிலும் - தவம் உட்பட இராவணனுக்குச் சமமானவர்கள். எனவே, பரம் பொருள், மானிடச் சட்டை தாங்கி இவ்வுலகிடை வந்து, தானே போரிட்டுக் கொல்லவேண்டிய சிறப்பைப் பெற்றனர். | இராமானுஜன் ஆகிய இலக்குவன், நடந்துகொண்டதும ்சரியானதே ஆகும். தனக்கென்று இறைவன் கொடுத்துள்ள ஆற்றலைப் பயன்படுத்தி இந்திரசித்தனைக் கொல்ல முயன்றான். அது முடியாது என்று உறுதியானவுடன் தான் இறைவனைத் துணைக்கு அழைக்கின்றான். இலக்குவன், அவனுடைய தவப்பலன், அவன் ஆற்றல், தெய்வப்படைகள் ஆகிய அனைத்தும் செய்ய முடியாத ஒரு செயலை, இறைவன் பெயரோடு சேர்ந்த ஒரு பிறைமுக வாளி செய்துமுடிக்கின்றது. இறைவனுடைய நாம மகிமை, சாம்பவானுடைய சிறகுகளை வளரச் செய்கிறது; அனுமனைக் கடல் கடக்க வைக்கிறது; ஒரு சாதாரண அம்பு இந்திரசித்தன் தலையைக் கொய்கிறது. 6ம் நூற்றாண்டுமுதல் 8ம் நூற்றாண்டுவரை,ஆழ்வார்கள் பக்தி இயக்கத்தை வளர்த்து, இறைவன் நாம மகிமையை எடுத்துக் கூறினர். 9ம் நூற்றாண்டில் தோன்றிய கம்பநாடன், இக்கருத்துக்கு அரண் செய்வதுபோல இந்த மூன்று இடங்களிலும் நாம மகிமையை வெளிப்படுத்துகிறான். | இராவணன் : மகன் இந்திரசித்தனுடன் பேசிய சொற்களை வைத்து அவன் வாழ்வின் முடிவை இராவணன் அறிந்துகொண்டான் என்றும், எஞ்சிய நாட்களை எவ்வாறு கழிக்க வேண்டும் என்றும், இறுதிவரையில் தான் என்ன செய்ய வேண்டும் என்றும் எல்லா வகையிலும் ஆய்ந்து, தெளிந்து, ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் எனக் கண்டோம். இந்திரசித்தன் முடிவு இவ்வாறுதான் இருக்கும் என்று கும்பகர்ணன் முன்னரே கூறியுள்ளான். இப்பொழுது இந்திரசித்தனும் அதையே கூறினான். அப்படி இருந்தும் மறுபடியும், நிகும்பலை அழிந்த பின்னும், இந்திரசித்தனைப் போருக்கு அனுப்பினான் இராவணன் என்றால், இராவணன் மனநிலையை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. இந்த நிலையில் இராவணன் மனத்தில் சகோதர வாஞ்சையோ, புத்திர வாத்சல்யமோ, சீதையின் மாட்டுக் காமமோ இல்லை. குலத்து மானத்தை இறுதிவரை நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணமே உள்ளது. மூவுலகுக்கும் அச்சமூட்டிய இராவணன், |
|
|
|