74   யுத்த காண்டம்

"மன்றல் அம்குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு

கொன்று, அலந்தலைக்கொடு, நெடுந் துயரிடைக்

குளித்தல்:

அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் உறுதல்: 

இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்'

என்றான்.


 

(9667)
 

இவ்வாறு வஞ்சினம் கூறித் தேர் ஏறும்  இராவணன்
மனநிலையை,   இத்தேர்    ஏறு படலத்தின் மூன்றாவது
பாடலிலேயே மிக நுணுக்கமாக விளக்குகிறான் கம்பன்.
 

"ஈசனை, இமையா முக் கண் ஒருவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து...............................................

(9644)
 

இந்த அடி ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். சிவ   பக்தனாகிய
இராவணன் இமையா முக்கண் இறைவனைக் கடைசி நாளன்றும்
பூசனை செய்தான்  என்று   சொல்லவருகின்ற    கம்பநாடன்,
"இருமைக்கு   ஏற்ற     பூசனை   முறையின் செய்து" என்று
கூறும்பொழுது, இராவணனுடைய   ஆழ்    மனம்,  அகமனம்,
புறமனம் ஆகிய மூன்றையும் படம்பிடித்துக் காட்டுவதன் மூலம்
இராவணன் பெற்ற புதிய சொரூபத்தை எடுத்துக்காட்டுகிறான்.
 

முக்கோடி வாழ்நாள்   வாழ்ந்தவன்,   மூவுலகம் போற்ற
வாழ்ந்தவன் இறப்பு உறுதி  என்று அறிந்து,  அந்தச்  சாவை
எதிர்கொள்ளப் போகும்பொழுது எப்படி அமைதியாக இருக்க
முடியும்? மனத்தை அடக்கிய பெரியவர்கள்கூட    இத்தகைய
சூழ்நிலையில் தடுமாற்றம் அடைதல் இயல்பே  ஆகும்.  இந்த
நிலையிலும் இருமைக்கு   ஏற்ற பூசனையை ஒருவன் எவ்வாறு
செய்ய   முடியும்?   இருமைக்கு ஏற்ற பூசனை என்ற தொடர்
இம்மை, மறுமைக்கு ஏற்ற பூசனை என்று பொருள் தருவதுடன்,
காமிய,  நிஷ்காமிய   பூசனை   செய்தான்  என்றால், அவன்
சமதிருஷ்டி பெற்று, ஸ்திதப்பிரக்ஞ நிலைபெற்ற ஒருவனாகவே
இருத்தல் வேண்டும்.
 

நிஷ்காமிய பூசைக்கூட, மனத்தில் ஒரு சலனம் இல்லாமல்
சாதாரண   காலங்களில் அமைதியாக பூசை செய்தானே அதே
போலதான் இன்றும் செய்தான் என்பதைக் குறிக்கவே கவிஞன்
பூசனை முறையில் செய்து என்று கூறுகிறான்.