முறையில் என்ற சொல்லினால் பதட்டமோ, கவலையோ, மன உளைச்சலோ, பகைமையோ, காமமோ எதுவுமில்லாமல் மன அமைதியுடன் இருந்தால் தான் முறைப்படி பூசை செய்ய முடியும். இந்த இடத்தில் கவிஞன் இராவணன் இறுதிப் போருக்குப் புறப்படும் நிலையில் இவ்வாறு பூசனை செய்தான் என்று கூற ஒரு காரணமுண்டு. சுற்றத்தார் யாவரும் சாவில் படநேர்ந்த நிலையிலும், தன்னையே நேராகும் தம்பியையும் தனயனையும் இழந்த நிலையிலும் கலக்கத்திற்கு இலக்காகிய நெருக்கடி மிகுந்த அவல நிலையிலும் முறைப்படி பூசனை செய்தான். ஏன் கம்பன் இவ்வாறு கூறுகிறான் என்றால், போர்க்களத்தில் உண்மையில் இராமன் யார் என்பதை இராவணன் அறியமுடிகிறது. |
இந்த எண்ணம் இராவணனுக்கு திடீர் என்று தோன்றவில்லை. மகோதரனிடம் இராமன் பெருமையையும், வில்லாற்றலையும் இராவணன் பேசும்போதுகூட, இந்த எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு சுத்த வீரன், மற்றொரு சுத்த வீரனைப் புகழ்வதாகவே அவ்விடம் அமைந்துள்ளது. இராமனைப் பற்றிய இப்புகழுரைகளை மாமனிடம் பேசுகின்ற அதே நேரத்தில் இராவணனின் ஆழ்மனத்தில், இராமன் பரம் பொருள் என்ற எண்ணம் அங்குரம் போல் முளைவிடுகின்றது. அந்த அங்குரத்திற்கு வித்திட்டவன் அனுமனே ஆவான். பிணி வீட்டு படலத்தில், திரிமூர்த்திகளையும் "புல்லிய வலியினோர்" (5878) என்று பேசிய அனுமன், மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய, காலமும், கணக்கும் நீத்த காரணன்" (5884) என்று இராமனைப்பற்றிக் கூறியது மாபெரும் அறிஞனான இராவணன் மனத்தில் அனுமன் இட்ட விதையாகும். இந்த விதைதான், இராவணன் மாமனிடத்தில் பேசும்பொழுது அங்குரமாக முளைத்து, இப்பொழுது இறுதிப்போரில் முழுமரமாக வளர்ந்து, எதிரில் நிற்பவன் வேத முதற்காரணன் என்பதை உணருமாறு செய்கின்றது. இருமைக்கு ஏற்ற பூசனையை மனக்கலக்கம், அவசரம் ஆகியவற்றில் |