மாறாக பச்சாதாபமே கொள்கிறான். யாரென நினைந்தீர் கமலக் கண்ணனை என்று அவன் இராகவன் ஆற்றலை விரிவாக எடுத்துக்கூறியும் தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்ட பிராட்டி முன்பின் யோசியாமல் 'நின்றநின் நிலை, இது நெறியிற்று அன்று' என்று கூறியது மிகக் கொடிய வார்த்தை எனினும் அது பேசப்பட்ட சூழ்நிலையையும், பேசியவள் மனைவி ஸ்தானத்தை வகிக்கும் பெண் என்பதையும் அறிந்தால் அவளை மன்னிப்பது எளிதாகும். |
இலக்குவன் இராமனிடம் சென்றபொழுது அவனைக் கண்ட இராகவன் திடுக்குற்று வந்த காரணம் பற்றி வினவ, இளையோன் தேவியின் துயரத்தையும், தான் போகாவிட்டால் அவள் தீ இடைபுக முயன்றதையும், கேடு வரும் என்று தான் அஞ்சுவதையும் எடுத்துக் கூறினான். அண்ணன் தம்பி ஆக இருவரும் அவள்மாட்டுச் சினமோ, வெறுப்போ கொண்டதாக எக்குறிப்பும் இப பாடல்களில் இல்லை. அவள் பெண்மையின் காரணமாக தோன்றிய அச்ச உணர்வின் காரணமாக இவ்வாறு பேசினாள் என்று நினைத்தார்களே தவிர வேறு இல்லை. |
அதன்பிறகு விரைவாக நடந்த செயல்கள் பிராட்டியைக் கதிகலங்கச் செய்துவிட்டன. தன்னைக் காத்து நின்றவனை மனம் நோகும்படிப் பேசி தானே போகச் சொல்லியது எவ்வளவு அறியாமை உடையது என்பதை அசோகவனத்தில் இருக்கும்பொழுது அமைதியாகச் சிந்திக்கின்றாள். இராம பக்தியில் ஈடு இணையற்று விளங்கிய ஒரு பெருமகனைத் தரக் குறைவாக பேசியதை அறிந்த இராமன், தன்னை அறிவிலள்; அரசியாக இருப்பதற்கு தகுதியற்றவள் என்று நினைந்து ஒதுக்கிவிட்டானோ என்று அஞ்சுகிறாள். |
என்னை, நாயகன், இளவலை, எண்ணலா வினையேன் |
சொன்ன வார்த்தை கேட்டு, "அறிவு இலள்" எனத் |
துறந்தானோ? |
..................................................................................... |
(5082) |
தான் முன்பின் யோசியாமல், இராமானுஜனாகிய இளையவனைப் பேசியது எத்துணைப் பெரிய தவறு என்று இப்பொழுது அவளால் உணர முடிகின்றது. இராம பக்தனைப் பார்த்து நீ நடந்து கொள்வது சரியில்லை என்று அண்ணன் மனைவி பேசினால் இதைவிடப் பெரிய தவறு வேறு இருக்க முடியாது. ஆகவே, இவ்வாறு நினைந்து நினைந்து |