தோன்றிமறையும் அன்பின் வடிவான சத்ருக்கனன் மற்றொரு பக்கம் கவரி வீசுகிறான். எனவே இராமன் என்ற அறத்தின் மூர்த்தி மேலும், கீழும், பக்கங்களிலும் அன்பு, கடமை, தொண்டு என்பவற்றால் சூழப்பட்டுள்ள ஓர் உருவகத்தை இந்த ஒரு பாடலில் கவிஞன் தந்துவிடுகிறான். காந்தி அடிகள் கூறிய இராமராஜ்ஜியத்திற்குக் கம்பனை விடச் சிறந்த விளக்கம் தந்தவர் வேறுயாரும் இலர். 'அங்கதன் உடைவாள் ஏந்த' என்ற தொடர் மிக நுட்பமானதாகும். பகை என்று கருதப்பெற்று கொல்லப்பட்டவனாகிய வாலியின் மகன் அங்கதன் ஆவான். அரசனுக்குரிய அதிகாரச் சின்னமாகிய உடைவாள் பகைவனின் மகன் கையில் சென்றது என்றால், அதுவும் விரும்பித் தரப்பெற்றது என்றால் இராமன் ஆட்சியில் வாளுக்கு வேலையில்லை என்ற கருத்தைச் சொல்லாமல் சொல்கிறான் கவிஞன். உடைவாள் பிடிக்க என்று சொல்லாமல், உடைவாள் ஏந்த என்று கூறியதால் வாளைப் பயன்படுத்தும் நாட்கள் ஒழிந்து விட்டன. அது அலங்காரப் பொருளாக ஏந்தப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கவே 'ஏந்த' என்ற சொல்லை பயன்படுத்துகிறான் கவிஞன். இந்த ஒரு பாடலில் கம்பன் கண்ட இராம காதையின் முழுச் சிறப்பும் இடம் பெறுவதைக் காணலாம். |