அதிகாரம், இன்பவாழ்க்கை என்ற இரண்டையும் ஒன்று கலந்ததால் தசரதன் வாழ்க்கை முழுத்தன்மை பெறவில்லை. அவனுடைய இன்பவாழ்க்கையும் அறுபதினாயிரத்தால் வகுக்கப்பட்டபொழுது தன் சிறப்பை இழந்துவிட்டது. அவன் மகனாகிய இராகவன் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்காமல் முழுவதுமாகத் தக்க பத்திரமாகிய பரதனிடத்தில் தந்து விட்டதால் அக்கவலை நீங்கி விடுகிறது. அவனுடைய இன்ப வாழ்க்கை ஒருத்தியோடு அமைந்ததால் அதுவும் முழுத்தன்மை பெற்றதாகிவிடுகிறது. எனவே, தந்தை செய்ய இயலாத பலவற்றை தனயன் செய்து காட்டினான் என்று சொல்லும் முறையில், விரத நூல் முனிவன் என்ற பாடலை அமைத்துள்ளான். ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க இராகவன் என்ற தனிமனிதனுடைய வாழ்வு முழுவதையும் படம்பிடித்துக் காட்டுவதாய் அமைந்திருத்தலைக் காணலாம். |
அடுத்துள்ள விடைகொடுத்த படலத்தில் ஒரு பகுதி நம் மனத்தில் ஆழமாகப் பதிக்க வேண்டிய ஒன்றாகும். அயோத்தி மீண்ட இராகவன் முடி சூடிக்கொண்டு தன்னுடன் இருந்த குகன், சுக்கிரீவன் முதலியோருக்கு தக்க பரிசுகளைக் கொடுத்து விடை கொடுத்து அனுப்புகிறான். இறுதியாக எஞ்சுபவன் அனுமன் ஆவான். அவனுக்கு என்ன பரிசு கொடுப்பதென்று இராமனுக்கே புரியவில்லை. கைம்மாறு கருதாமல் அனுமன் செய்த தொண்டுகளை யெல்லாம் அவ்வப்போது பாராட்டி உள்ளான் இராகவன். மருத்துமலை வந்தபொழுது அனுமனை நோக்கித் தழுதழுத்த குரலில்,"ஐயனே! தசரதன் பிள்ளைகளாகிய நாங்கள் நால்வரும் முன்னரே இறந்துவிட்டோம். இப்பொழுதுள்ள நால்வரும் உன்னிடம் |