என்று அவன் உரைத்த போது- அத்திருமால் கூறியருளிய போது கேட்ட (அத்தேவர்கள் அனைவரும்); மன்றல் அம் துளவு அணியும் மாயனார்- மணம் பொருந்திய. அழகிய துழாய்மாலை அணியும் மாயனாகிய திருமால்;இன்று எமை அளித்தனர் என்னும் ஓம்பலால்- இன்று எங்களை யெல்லாம் காப்பாற்றி அருளினார் என்னும் மகிழ்ச்சியால்; எழுந்து துள்ளினார் நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்- எழுந்து நின்று ஆடினார்கள் நன்மையான மங்கல கீதம் பாடினார்கள். துள்ளுதல்: ஆடுதல். நன்றி: நன்மை. மங்கலம்: சுபம். இங்கு வெற்றிக் குறித்து நின்றது. நாதம்: ஓசை. இசையைக் குறித்தது. மன்றல்: மணம். மாயம்: சாமர்த்தியம் அதனை உடையவன் மாயன். ஏம்பல்: மகிழ்ச்சி. திருமால் கூறியது கேட்ட தேவர்கள் மகிழ்ச்சியால் ஆடிப்பாடினர் என்பது கருத்து. 23 |