அசாமி மாதவ் கந்தவி : அசாமி ராமாயணம் (கி. பி. 14) வங்காளம் கிருத்திவாசன் : வங்காள ராமாயணம் (கி. பி. 15) ஒரியா பலராமதாஸ் : ஒரியா ராமயணம் (கி. பி. 16) மராத்தி ஏக நாதர் : பாவார்த ராமாயணம் (கி. பி. 16) நாட்டுப்புற இலக்கியங்கள் தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு மக்களிலக்கியப் பாடல்கள். ஒப்பாய்வு பெறும் பால காண்டப் பகுதிகள் கீழ்வரும் பொருட்கூறுகளின் அடிப்படையில் பால காண்டங்களைப் பற்றிய இவ் ஒப்பியலாய்வு நிகழ்த்தப் பெறுகிறது. காண்ட அமைப்பு, காப்பிய நோக்கம், காப்பியத் தொடக்கம், நாட்டு நகர வருணனைகள், இராமனின் பிறப்பு, தாடகை வதம், அகலிகை சாப நீக்கம், சீதையின் பிறப்பும் திருமணமும், பரசுராமர் எதிர்ப்பு. காண்ட அமைப்பு பால காண்டம் 77 சருக்கங்கள், 2355 சுலோகங்கள். முதல் நான்கு சருக்கங்கள் (220 சுலோகங்கள்) பதிகம் போல அமைந்தது. வான்மீகி நாரதரைக் கண்டு இராமர் வரலாறு அறிதல், பிரம்ம தேவர் வான்மீகியின் இராமாயண முயற்சியை ஆசீர்வதித்தல், வான்மீகி நிட்டையில் அமர்ந்து இராமாயண வரலாறு முழுவதையும் ஞானக்கண்ணால் கண்டு உணர்ந்து காவியத்தை இயற்றி முடித்தல், குச லவர்கள் இருவரும் அக்காவியத்தை இனிமையாகப் பாடுவது கேட்டு இராமபிரான் அவர்களைத் தம் அவைக்கு அழைத்து அக்காவியத்தைப் பாடுமாறு வேண்ட அவ்விருவரும் பாடத் தொடங்குதல் ஆகிய செய்திகளைத் தருகின்றன. ஏறக் குறையப் பாயிரம் போன்ற பணியினை இச் சருக்கங்கள் செய்கின்றன. ஐந்தாம் சருக்கம் தொடங்கி எழுபத்தேழாம் சருக்கம் முடிய 76 சருக்கங்களா யமைத்து 2135 சுலோகங்களை உடையதாக வான்மீகியின் பாலகாண்டம் விளங்குகிறது. |