இந்திரனே மாவலியின் தங்கையைக் கொன்றுள்ளான். ஆதலால் நல்லவர்களைத் துன்புறுத்துபவர் யாராயினும், பெண்ணாயினும், அவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதே அரச நீதி. இது சத்தியம். சந்தேகமில்லை. எனவே கொல் என்றான் விசுவாமித்திரன். (1,10:11) இதனைக் கேட்டதும் இராமன் அம்பெய்து தாடகையைக் கொல்கிறான். எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணத்தில் தாடகை வதம் குறித்த விவாதங்கள் எவையும் எழவில்லை. தாடகையைக் காட்டி, ‘இவளைக் கொல்’ என்று விசுவாமித்திரன் கூற, இராமன் உடனே அம்பெய்து அவளைக் கொன்று அவன் ஆணையை நிறைவேற்றுகிறான். துளசி ராமாயணத்தில் விசுவாமித்திரன் முதலியோர் தாடகை வனம் செல்லும் வழியிலேயே தாடகை எதிர்ப்பட ‘இவளைக் கொல்’ என்று முனிவன் கூறியதும் இராமன் அம்பெய்து அவளைக் கொன்று விடுகிறான். எனினும், அவள் மீது இரக்கங்கொண்டு அவளுக்கு நற்கதி அருளுகிறான். (208-209/1,2,3) நாட்டுப்புற இலக்கியம்: தமிழ் வில்லுப்பாட்டு விஸ்வாமுத்திர மகா முனிவர் தாடகையாள் மலையில் விண்ணவர்க்கென்று ஒரு வேள்வி நடத்தினார். அந்த வேள்வியை இராவணன் பாட்டியான தாடகை வந்து சிறுநீரால் அழித்துப் பங்கம் செய்தாள். அதையறிந்த விஸ்வாமுத்திரர் ராச்சதையைக் கொல்வதற்கு ராமனையும் தந்திடுவோம் என்று தசரதனை வேண்டிப் பெற்றார். மூன்று பேரும் தாடகையாள் மலையில் வந்து ராமன் லக்ஷ்மணன் இரு பேரையும் காவலாக வைத்து விஸ்வாமுத்திரர் வேள்வியை நடத்துகிறார். அதைக் கண்ட தாடகை கோபம் கொண்டு, மரங்களையும் கல்களையும் தூக்கி வீசுகிறாள். எம்பெருமான் எப்படி எண்ணுகிறாரென்றால், இனி இவளைப் பெண் என்று எண்ணக் கூடாது. அதாவது தன்னைக் கொல்ல வரும் பசுவானாலும் தான் கொல்லலாம் என்று வேதவாக்கியம் இருக்கிறது. ஆகையால், இவளைக் கொல்லாமல் விடக்கூடாது என்று எண்ணி, அக்கினி அஸ்திரத்தை அவசரமாய் வில்லில் வைத்து |