என்று தன் மகன் இலக்குவனுக்கு அறிவுரை வழங்கி இராமனுடன் காட்டிற்கு வழியனுப்புகிறாள். துளசி ராமாயணம் இராமனுடன் காடு செல்ல அவனுடைய அனுமதி பெற்றதும், இராமனின் ஆணையின்படி இலக்குவன் தன்தாய் சுமித்திரையின் இசைவு பெறச் சென்றான். அவளும் இராமனைத் தந்தையாகவும், சீதையைத் தானாகவும், வனத்தை அயோத்தியாகவும் கருதிக் கொண்டு அவனுடன் செல்ல ஆணையிடுகிறாள். (II. 69 -1,2). தொகுப்புரை சீதை இராமனுடன் வனவாசம் சென்றே தீருவேன் என்று சீதை பிடிவாதமாகக் கூறி இராமனின் இசைவைப்பெறுவதாக வான்மீகம் முதலான எல்லா இராமாயணங்களும் கூறுகின்றன. காட்டிற்கு வரவேண்டாம் எனச் சீதையைத் தடுப்பதற்காக இராமன் கூறும் கருத்துகளும், வந்தே தீருவேன்; இன்றேல் இறந்து படுவேன்எனத் தன் முடிவை வற்புறுத்துவதற்காகச் சீதை காட்டும் காரணங்களும் எல்லா இராமாயணங்களிலும்ஏறக் குறைய ஒரே தன்மையனவாய்க் கூறப்படுகின்றன. எந்நிலையிலும் கணவனைப் பிரியாதிருத்தல் என்னும் இந்திய இல்லறப் பொதுப் பண்பாட்டுக் கருத்து சீதையால் வற்புறுத்தப்பெறுகிறது. இதனைச் சிலஇராமாயணங்கள் தத்தம் இலக்கியப் பண்பாட்டிற்கேற்ப எடுத்துரைக்கின்றன. காட்டு வாழ்க்கை துன்பங்கள் பலவற்றையுடையது. மெல்லியல் வாய்ந்த சீதையால் தாங்க இயலாதது என்னும் இராமனின்கருத்தை மறுக்குமிடத்து. நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு? என்று சீதை கூறுவதாகக் கம்பன் படைத்துக் காட்டுகிறான். இனி, நீ உடன் வருவதால் எனக்குப்பல இடையூறுகள் விளையும் என்ற இராமன் கூற்றுக்கு, "உங்களுக்கு என்னால் இடையூறு வராமல் பார்த்துக்கொள்வேன்,நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன இடையூறு வர முடியும்" என்று சீதை கேட்பதாக வான்மீகம் முதலானபல இராமாயணங்கள் காட்ட, என் துறந்த பின் இன்பம் கொலாம் என்று கம்ப ராமாயணச் சீதை கூறுகிறாள். தமிழ் அகப்பொருள் மரபுகளான பாலையும், மருதமும் இங்கேகை கொடுத்திருப்பதைக் காண்கிறோம். |