16

ஆரணிய காண்ட முன்னுரை

பேரா. அ.ச. ஞானசம்பந்தன்

     கம்பநாடனின் இராமகாதையில் மூன்றாவதாக அமைந்துள்ளது ஆரணிய
காண்டமாகும். காடு என்ற பொருளைத் தரும் ஆரண்யம் என்ற வடசொல்
அப்படியே எடுத்தாளப்பெற்றுள்ளது. விராதன் வதைப் படலத்தில் தொடங்கி,
சவரி பிறப்பு நீங்கு படலம் வரை உள்ள பதின்மூன்று படலங்களைப்
பெற்றுள்ளது, இக்காண்டம். தொடக்கம், முடிவு ஆகிய இரு படலங்களும்
இராகவனுடைய அம்பு, கருணை நிறைந்த கண் ஆகிய இரண்டும் பட்டு
முறையே விராதனும் சவரியும் பிறப்பு நீங்குகின்றனர் என்பதை அறிவிப்பன.

     காப்பியம் என்ற முறையில் பார்த்தால், காப்பிய வளர்ச்சிக்கு
இரண்டாவது திருப்புமுனை இக்காண்டத்தின் நடுநாயகமாக
அமைந்துள்ளதைக் காணலாம். அயோத்தியா காண்டத்தில் கைகேயி செயல்
காப்பிய நோக்கத்திற்கு முதல் திருப்புமுனையாகும். அப்பெருமாட்டி
இராகவனை வனத்திற்கு அனுப்பவில்லையானால் திருமகள் கேள்வன்
இவ்வுலகிடை இராகவனாக அவதரித்ததன் நோக்கம் நிறைவேறாமல்
போய்விடும். அதனால் தான் அதனை முதலாவது திருப்புமையம் என்று
கூறுகிறோம். வனத்திடை வந்தும் சிற்றன்னை பணித்ததுபோலத் தாழிரும்
சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு பதினான்கு ஆண்டுகள்
கழிந்து திரும்பவும் அயோத்திக்குச் சென்றிருந்தால் அதனால் என்ன பயன்
விளையமுடியும்? தவம் மேற்கொள்பவருக்கும் புண்ணிய நதிகள்
ஆடுவோருக்கும் அவற்றின் பயனை நல்குகின்ற பரம்பொருளே இப்பொழுது
இராகவனாக அவதரித்துள்ளான். எனவே, தவம் மேற்கொள்ளுதலும்
புண்ணிய நீராடுதலும் அவனுக்குத் தேவையில்லாதனவாகும். இந்நிலையில்
அவதார நோக்கம் நிறைவுபெற வேண்டுமானால் ஓர் இன்றியமையாத
திருப்புமுனை தேவைப்படுகிறது.