சுந்தர காண்டம் -முன்னுரை பேரா. அ. ச. ஞானசம்பந்தன் கம்பநாடனின் இராமாவதாரத்தில்ஐந்தாவதாக உள்ளது, சுந்தரகாண்டம். இப் பெயர் வால்மீகி இட்ட பெயராகும். ஏனைய காண்டங்களுக்கு வால்மீகி இட்ட பெயராகும். ஏனைய காண்டங்களுக்கு வால்மீகி இட்ட பெயர்களை அப்படியே எடுத்துக்கொண்ட கவிச்சக்கரவர்த்தி இக் காண்டப் பெயரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுகிறான். இக் காண்டத்தின் பெயர் பற்றியும், பொருள்பற்றியும் பல வகையான கருத்து வேறுபாடுகள் உண்டு. இக் காண்டம் முழுவதிலும் கடைசிப் படலத்தைத் தவிர வேறு எங்கும் காப்பிய நாயகனைக் காணமுடியாது. அதற்குப் பதிலாக, தொண்டின் உறைவிடமாகவும் தன்னையிழந்த பக்திக்கு ஒரு முழு வடிவமாகவும் உள்ள அனுமன், காண்ட முழுவதும் விசுவரூபம் கொண்டு விளங்குகிறான். கிட்கிந்தா காண்டத்தின் தொடக்கத்தில் மாணி வடிவமாக (பிராமண பிரம்மச்சாரி) நம் முன்னர்க் காட்சித் தருகிறான், அனுமன். இராமனுடைய கடைக்கண் பார்வை கிடைத்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்கின்றான், அனுமன். அக்கடைக்கண் பார்வை அனுமனையும் அவன் உடலையும் எவ்வளவு உயரத்திற்கு வளர்த்தது என்பதைக் கிட்கிந்தா காண்டத்தில் காண முடிகின்றது. இராமன் எதிரே இருக்கின்றவரையில் அனுமன், அடக்கத்தின் உறைவிடமாய்ச் சாதாரண வடிவுடனேயே காணப்படுகிறான். அங்கதன் முதலாயினோரை அழைத்துக் கொண்டு தென்திசை நோக்கிப் புறப்பட்ட அனுமன், மயேந்திர மலையில் வந்து தங்குகிறான். இராமனுடைய கடைக்கண் நோக்கம் தன்னை எவ்வளவு தூரத்திற்கு வளர்த்துள்ளது என்பதை அவனேகூட அறியவில்லை. கடலைத் தாண்டுவது எப்படி என்ற ஆராய்ச்சியில் அனைவருடன் சேர்ந்து அனுமனும் மருள்கிறான். இந்நிலையில் சாம்பன், தன் பெருமை தான் அறியா அனுமனுக்கு அவனுடைய ஆற்றல்களை வரிசைப்படுத்தி நினைவூட்டுகிறான். (4719 - 4729) இந்த நிலையிலும் அடக்கத்தின் உறைவிடமாக உள்ள அனுமன் சாம்பவனை நோக்கி, |