முள்ளரை முளரி - முள் கொண்ட தண்டினை யுடைய தாமரையின்; வெள்ளி முளை இற- வெண்மையான முனை ஒடியவும்; முத்தும் பொன்னும் தள்ளுற- நிலத்தி லிருந்து முத்தும் பொன்னும் ஒதுக்கித் தள்ளப்படவும்; மணிகள் சிந்த- பல வகை மணிகள் சிந்தவும்; சலஞ்சலம் புலம்ப- சலஞ்சலம் என்ற சங்கு புலம்பவும்; சாலில் மீன் துள்ளித் துடிப்ப- கொழுமுனையில் புரளும் மண் திரளில் மீன்கள் துள்ளித் துடிக்கவும்; ஆமை தலை புடை சுரிப்ப- ஆமைகள் தலையையும் கால்களையும் ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்ளவும்; தூம்பின் உள் வரால் ஒளிப்ப- மதகுகளினுள் வரால் மீன்கள் ஒளிந்து கொள்ளவும்; உழு பகடு மள்ளர் உரப்புவாரும்- உழுகின்ற எருதுகளை ஓட்டி அதட்டுகின்ற உழவர்களும் (அந்நாட்டில் உள்ளனர்). தாமரைத் தண்டில் முள் உண்டென்பதை ‘முள்ளரைத் தாமரை முகிழ் விரி நாட்போது’ (சிறுபாண். 183) என்னும் நத்தத்தனார் வாக்காலும் ‘முள்ளை உடைத்தாகிய தண்டினையுடைய வெண்டாமரையினது அரும்பு விரிந்த நாட்காலத்திற் பூ’ என்னும் நச்சினார்க்கினியர் உரையாலும் உணரலாம். வெள்ளி: வெள்ளை நிறம். சலஞ்சலம்: சங்கில் ஒரு வகை. புடை: பக்கம்: இங்கே ஆகுபெயராய் ஆமையின் பக்கங்களில் உள்ள கால்களைக் குறித்தது. ‘பொருத்துவாரும்’ (46) முதலாக ‘உரப்பு வாரும்’ (49) முடிய உள்ள உம்மைச் சொற்களோடு ‘உள்ளனர்’ என்ற முற்றை வருவித்து முடிக்க. 18 கடல் வாணிகம் |