ஓர் வறுமை இன்மையால்- (அந்த நாட்டில்) வறுமை சிறிதும் இல்லாததால்; வண்மை இல்லை- கொடைக்கு அங்கே இடமில்லை; நேர் செறுநர் இன்மையால்- நேருக்கு நேர் போர்புரிபவர் இல்லாததால்; திண்மை இல்லை- உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; பொய் உரை இல்லாமையால்- பொய்ம் மொழி இல்லாமையால்; உண்மை இல்லை- மெய்ம்மை தனித்து விளங்கவில்லை; பல்கேல்வி மேவலால்- பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால்; வெண்மை இல்லை- வெள்ளறிவாகிய அறியாமை இல்லை. கோசலை நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால் வண்மையின் சிறப்புத் தெரிவதில்லை; பகைகொண்டு போர்புரிபவர் இல்லாதலால் உடல் வலிமையை உணர வழியில்லை; பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை; கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை என்றார். ‘யாதும். கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை’ (165) என்று மேலே கூறுவர். 53 |