விளிம்பு சுற்றும் வெள்ளிக்கட்டி முற்றுவித்து - அந்த அகழியின் ஓரம் முழுவதும் வெள்ளியினாலே கட்டி முடித்து; உள்ளுறப் பளிங்கு பொன்தலத்து அகட்டு அடுத்துறப்படுத்தலின் - உள்ளிடமெல்லாம் பளிங்குக் கற்களைத் தள வரிசையாகப் பதித்திருப்பதாலே; ‘தளிந்த கல்தலத்தொடு- பளிங்குக் கல்லால் தளவரிசை இடப்பட்ட நிலத்தோடு; அச்சலத்தினை- அந்த அகழியின் தெளிந்த தண்ணீரை; தனித்துறத் தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல்- தனியாக வேறு பிரிந்து இது நீர் இது பளிங்கு என்று தெளிவாகப் பிறர்க்கு உணர்த்துவோம் என்று சொல்வது; தேவராலும் ஆவதோ-தேவர்களாலும் இயலாததொன்றாகும். அகழியின் விளிம்பு வெள்ளி - தளம் பளிங்கு; தெளிந்த நீர் எனவே நீருக்கும் பளிங்குக் கற்களுக்கும் வேறுபாட்டை அறிவது தேவர்களாலும் ஆகாதது என்பது கருத்து. இங்கே அகழியின் நீர் தெளிவாக இருப்பதாகக் குறிப்பவர் முன்னே (106) கலங்கியிருப்பதாகக் குறித்திருக்கிறார். 20 அகழியை வளைத்த சோலை |