Cilipidikaram-Padipurai
புகார்க் காண்டம்

10. நாடுகாண் காதை

"கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்"





5
வான்கண் விழியா வைகறை யாமத்து,
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க,
கார் இருள் நின்ற கடைநாள் கங்குல்-
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப,
ஏழகத் தகரும், எகினக் கவரியும்,
தூ மயிர் அன்னமும், துணை எனத் திரியும்,
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து-ஆங்கு-

"மணிவண்ணன் கோயிலை வலம் செய்து போதல்"



10
அணி கிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக் கழிந்து-,

"
இந்திரவிகாரங்களை வணங்கிப் போதல்"

பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி-

"
சிலாதலத்தைத் தொழுது வலம் கொள்ளல்"

15




20




25
புலவு ஊண் துறந்து, பொய்யா விரதத்து,
அவலம் நீத்து, அறிந்து, அடங்கிய கொள்கை,
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐ-வகை நின்ற அருகத்தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்து, தலைமயங்கிய வான் பெரு மன்றத்து,
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல்,
நீர் அணி விழவினும், நெடுந் தேர் விழவினும்,
சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலம் தொழுது, வலம் கொண்டு-

"
புகார் நகரின் வாயிலைக் கடத்தல்"


மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி-

"இலவந்திகைப் பள்ளியின் எயிலின் புறத்தே போதல்"




30
கலையிலாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும்,
பல் மலர் அடுக்கிய, நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகி-

"காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்"





35
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து

"கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்"


காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-

"கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும"





40
ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு

"கோவலனும் கண்ணகியும் அறப்பள்ளியில் இருந்த கவுந்திஅடிகளைத் தொழுதல்"


45
தேமொழி-தன்னொடும், சிறைஅகத்து இருந்த
காவுந்திஐயையைக் கண்டு, அடி தொழலும்-

"கவுந்தி அடிகளின் வினாவும் கோவலனது மறுமொழியும்"

‘உருவும், குலனும், உயர் பேர் ஒழுக்கமும்,
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்,
உடையீர்! என்னோ, உறுகணாளரின்
கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு?’ என-
‘உரையாட்டு இல்லை; உறு தவத்தீர்! யான்
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன்’-

"கவுந்திஅடிகள் ஊழின் வலிமையை எடுத்துக் காட்டியதோடு மதுரை செல்ல இருக்கும் தமது விருப்பத்தையும் வெளியிடுதல்"




55




60
‘பாடகச் சீறடி பரல் பகை உழவா;
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு
அரிது; இவள் செவ்வி அறிகுநர் யாரோ?
“உரியது அன்று; ஈங்கு ஒழிக” என, ஒழியீர்;
மற உரை நீத்த மாசு அறு கேள்வியர்
அற உரை கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த,
தென் தமிழ் நல் நாட்டுத் தீது தீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்,
போதுவல் யானும்; போதுமின்’

"கோவலன் அடிகளின் வருகையை உவந்து கூறல்"

என்ற
காவுந்திஐயையைக் கைதொழுது, ஏத்தி,
‘அடிகள்! நீரே அருளுதிர் ஆயின், இத்
தொடி வளைத் தோளி துயர் தீர்த்தேன்’ என-

"மதுரை செல்லும் வழியின் அருமை பற்றிக் கவுந்தி கூறல்"
"சோலையும் தோட்டமும் ஆகிய கரை வழி"


65




70




75
‘கோவலன்! காணாய்; கொண்ட இந் நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும் பல; கேள்மோ:
வெயில் நிறம் பொறாஅ மெல்லியல் கொண்டு
பயில் பூந் தண்டலைப் படர்குவம் எனினே
மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர்
பொய்யறைப் படுத்து, போற்றா மாக்கட்குக்
கையறு துன்பம் காட்டினும் காட்டும்;
உதிர் பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும்;
மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்துச்
செஞ் சுளைப் பலவின் பரல் பகை உறுக்கும்.

"வயல் வழி"





80




85




90




95
கயல் நெடுங் கண்ணி காதல் கேள்வ!
வயல் உழைப் படர்குவம் எனினே, ஆங்கு,
பூ நாறு இலஞ்சிப் பொரு கயல் ஓட்டி,
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை
மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின்,
கலங்கலும் உண்டு இக் காரிகை; ஆங்கண்,
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து,
சுரும்பு சூழ் பொய்கைத் தூ நீர் கலக்கும்;
அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி,
குடங்கையின் நொண்டு, கொள்ளவும் கூடும்;
குறுநர் இட்ட குவளை அம் போதொடு
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை,
நெறி செல் வருத்தத்து, நீர் அஞர் எய்தி,
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்;
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில்
பொறி மாண் அலவனும், நந்தும், போற்றாது,
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின்,
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது, யாங்கணும்,
அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை;
நெறி இருங் குஞ்சி! நீ வெய்யோளொடு
குறி அறிந்து, அவை அவை குறுகாது ஓம்பு’ என-

"மூவரும் வழிக்கொள்ளல்"



100
தோம் அறு கடிஞையும், சுவல் மேல் அறுவையும்,
கவுந்தி ஐயை, கைப் பீலியும், கொண்டு;
‘மொழிப் பொருள் தெய்வம் வழித் துணை ஆக’ என
பழிப்பு-அரும் சிறப்பின் வழிப் படர் புரிந்தோர்-

"காவிரி ஆற்றின் ஒலியும் பறவைகளின் ஓசையும்"




105




110




115
கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்,
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
கால் பொரு நிவப்பின் கடுங் குரல் ஏற்றொடும்
சூல் முதிர் கொண்மூப் பெயல் வளம் சுரப்ப,
குட மலைப் பிறந்த கொழும் பல் தாரமொடு
கடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புது நீர்க் கடு வரல் வாய்த்தலை,
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது,
ஆம்பியும், கிழாரும், வீங்கு இசை ஏத்தமும்,
ஓங்கு நீர்ப் பிழாவும், ஒலித்தல் செல்லா:
கழனிச் செந்நெல், கரும்பு சூழ் மருங்கின்
பழனத் தாமரைப் பைம் பூங் கானத்து,
கம்புள் கோழியும், கனை குரல் நாரையும்,
செங் கால் அன்னமும், பைங் கால் கொக்கும்,
கானக் கோழியும், நீர் நிறக் காக்கையும்,
உள்ளும், ஊரலும், புள்ளும், புதாவும்,
வெல் போர் வேந்தர் முனையிடம் போல,
பல் வேறு குழூஉக் குரல் பரந்த ஓதையும்;

"உழவரின் ஒலியும் பாட்டும்"

120




125




130




135




140
உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய
கழாஅ மயிர் யாக்கைச் செங் கண் காரான்
சொரி புறம் உரிஞ்ச, புரி ஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும் பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய,
கருங் கை வினைஞரும் களமரும் கூடி
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்;
கடி மலர் களைந்து, முடி நாறு அழுத்தி,
தொடி வளைத் தோளும் ஆகமும் தோய்ந்து,
சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றி,
செங் கயல் நெடுங் கண் சில் மொழிக் கடைசியர்
வெங் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்;
கொழுங் கொடி அறுகையும் குவளையும் கலந்து,
விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி,
பார் உடைப்பனர் போல், பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்;
அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த
பெருஞ் செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்;
தெண் கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும்;
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு, ஆங்கு,
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்-

"மறையோர் இருக்கையும் உழவர் இருக்கையும் ஆகிய
ஊர்கள் இடையிட்ட நாட்டின் வழியாகச் செல்லுதல்"




145




150




155
உழைப் புலிக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு
மழைக் கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில்,
மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து,
மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை; அன்றியும்,
பரப்பு நீர்க் காவிரிப் பாவை-தன் புதல்வர்,
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர், பழ விறல் ஊர்களும்,
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து,
மங்குல் வானத்து மலையின் தோன்றும்,
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு,
காவதம் அல்லது கடவார் ஆகி,
பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்-

"திருவரங்கத்தில் சாரணர் தோன்றுதல்"





160
ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-

"மூவரும் சாரணரை வழிபடுதலும், அச் சாரணர் அறிவுரை பகர்தலும்"


165




170




175




180




185




190
‘பண்டைத் தொல் வினை பாறுக, என்றே
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர்
வந்த காரணம், வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கின், தெரிந்தோன் ஆயினும்,
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின், விழுமம் கொள்ளான்-
‘கழி பெரும் சிறப்பின் கவுந்தி! காணாய்,
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை;
இட்ட வித்தின் எதிர்ந்துவந்து எய்தி,
ஒட்டும்காலை ஒழிக்கவும் ஒண்ணா;
கடுங் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்;
அறிவன், அறவோன், அறிவு வரம்பு இகந்தோன்,
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தலைவன், தருமன்,
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்,
பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்,
தத்துவன், சாதுவன், சாரணன், காரணன்,
சித்தன், பெரியவன், செம்மல், திகழ் ஒளி
இறைவன், குரவன், இயல் குணன், எம் கோன்,
குறைவு இல் புகழோன், குணப் பெரும் கோமான்,
சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன்,
அங்கம் பயந்தோன், அருகன், அருள் முனி,
பண்ணவன், எண் குணன், பாத்து இல் பழம் பொருள்,
விண்ணவன், வேத முதல்வன், விளங்கு ஒளி,
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது,
போதார், பிறவிப் பொதி-அறையோர்’ என-

"சாரணரது அறிவுறையைக் கேட்டு, கவுந்தி கூறிய புகழ்மாலை"




195




200




205
சாரணர் வாய்மொழி கேட்டு,தவ முதல்
காவுந்திகை தன் கை தலைமேல் கொண்டு,
‘ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லது, என் செவிஅகம் திறவா;
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது, என் நா;
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது,
கைவரைக் காணினும், காணா என் கண்;
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது, என்
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது;
அருகர், அறவன், அறிவோற்கு அல்லது, என்
இரு கையும் கூடி ஒரு வழிக் குவியா;
மலர்மிசை நடந்தோன் மலர் அடி அல்லது, என்
தலைமிசை உச்சி தான் அணிப்பொறாஅது;
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது,
மறுதர ஓதி என் மனம் புடைபெயராது’

"சாரணர் மறைதல்"



210
என்று அவன் இசை மொழி ஏத்தக் கேட்டு, அதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி,
நிவந்து, ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி,
‘பவம் தரு பாசம் கவுந்தி கெடுக’ என்று,
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது,
‘பந்தம் அறுக’ எனப் பணிந்தனர் போந்து-

"காவிரியைக் கடந்து தென்கரை அடைந்து மூவரும் பொழிலில் இருத்தல்"


215
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-

"வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும்"


220
வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்,
‘காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்’ என்றே-
‘நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர்?’ என வினவ-

"கவுந்தியின் மறுமொழி"

225
மக்கள் காணீர்; மானிட யாக்கையர்;
பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்’ என-

"தூர்த்தர்கள் பழிப்புரை"

‘உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ? கற்றறிந்தீர்!’ என-

"கவுந்திஅடிகள் சாபம்"


230
தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க-
‘எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை;
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக’ என-

"கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகளை வணங்கி, சாபத்தை நீக்கியருள வேண்டுதல்"



235




240
கவுந்தி இட்டது தவம் தரு சாபம்;
கட்டியதுஆதலின், பட்டதை அறியார்,
குறு நரி நெடுங்குரல் கூ விளி கேட்டு,
நறு மலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
‘நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்,
அறியாமை என்று அறியல் வேண்டும்;
செய் தவத்தீர்! நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீரோ!’ என-

"கவுந்தி அடிகள் சாபத்துக்கு எல்லை கூறுதல்"

அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி,
பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின்,
முன்னை உருவம் பெறுக, ஈங்கு இவர்’ என-

"உறையூர் சென்று சேர்தல்"

245
சாபவிடை செய்து, தவப் பெரும் சிறப்பின்
காவுந்திஐயையும், தேவியும், கணவனும்,
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து-என்.

"கட்டுரை"





5




10




15




20
முடி உடை வேந்தர் மூவருள்ளும்
தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்
தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும்,
பொய்யா வானம் புதுப் புனல் பொழிதலும்;
அரங்கும், ஆடலும், தூக்கும், வரியும்
பரந்து இசை எய்திய பாரதி-விருத்தியும்,
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்,
ஈர்-ஏழ் சகோடமும், இடைநிலைப்பாலையும்,
தாரத்து ஆக்கமும், தான் தெரி பண்ணும்,
ஊர் அகத்து ஏரும், ஒளி உடைப் பாணியும்,
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்;
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.

"வெண்பா"

காலை அரும்பி மலரும் கதிரவனும்,
மாலை மதியமும் போல் வாழியரோ-வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.