Cilipidikaram-Padipurai
மதுரைக் காண்டம்

1. காடுகாண் காதை


"உறையூரில் தங்கிய கவுந்தி முதலிய மூவரும் வைகறையில் புறப்பட்டுத் தென் திசை நோக்கிச் செல்லுகின்ற வழியில் உதயகாலத்தில் ஓர் இள மரக் காவில் புகுதல்"





5




10
திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக் கீழ்,
செங் கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து,
கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த,
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி,
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,
வெய்யவன் குண திசை விளங்கித் தோன்ற,
வள நீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர்
இள மரக் கானத்து இருக்கை புக்குழி-

" மாங்காட்டு மறையோன் தென்னனை வாழ்த்தியவண்ணம் இள மரக் காவில் புகுதல் "
15




20




25




30
‘வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!
ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க!
அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி,
வடி வேல் எறிந்த வான் பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள
வட திசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
திங்கள் செல்வன் திருக் குலம் விளங்க,
செங் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம்
பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி!
“முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி” என்று
இடி உடைப் பெரு மழை எய்தாது ஏக,
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப,
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க!’ என,
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி,
மா முது மறையோன் வந்தி்ருந்தோனை-
 

" கோவலன் மறையோனுடைய வருகை பற்றி வினாவுதல் "

‘யாதும் நும் ஊர்? ஈங்கு என் வரவு?’ எனக்
கோவலன் கேட்ப-குன்றாச் சிறப்பின்
 

" மறையோன் தன் வரவின் நோக்கத்தை எடுத்துரைத்தல் "

மா மறையாளன் வருபொருள் உரைப்போன்:

" திருவரங்கத்தில் திரு அமர் மார்பன் கிடந்த வண்ணம்
"

35




40
‘நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்ததுபோல,
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்
பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த,
விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி,
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்-

" திருவேங்கடத்தில் நெடியோன் நின்ற வண்ணம்"




45




50
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல-
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்-
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற
வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன்

" மறையோன் தனது ஊரையும் , தான் தென்னனை வாழ்த்திய காரணத்தையும் உரைத்தல் "


55
தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்,
கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின்,
வாழ்த்தி வந்திருந்தேன்; இது என் வரவு’ என,
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு-

" மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி மறையவனிடம் கோவலன் வினாவுதல் "

  ‘மா மறை முதல்வ! மதுரைச் செந் நெறி
கூறு நீ’ என-கோவலற்கு உரைக்கும்:
 

" மாங்காட்டு மறையோன் கூறிய மதுரை வழி கால நிலைமையையும் வழியின் அருமையையும் உணர்த்தல் "

60




65




70
‘கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி,
வேத்தியல் இழந்த வியல் நிலம் போல,
வேனல் அம் கிழவனொடு வெங் கதிர் வேந்தன்
தான் நலம் திருக, தன்மையில் குன்றி,
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து,
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்து,
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை-தன்னுடன்;
அறையும், பொறையும், ஆர் இடை மயக்கமும்,
நிறை நீர் வேலியும் முறைபடக் கிடந்த இந்
நெடும் போர் அத்தம் நீந்திச் சென்று-

" கொடும்பாளூரை அடுத்த நெடுங் குளக்கரையில் வழி முப் பிரிவாகப் பிரிதல் "

கொடும்பை நெடுங் குளக் கோட்டகம் புக்கால்-
பிறை முடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறை வாய்ச் சூலத்து அரு நெறி கவர்க்கும்-

" வலப் பக்கம் செல்லும் வழி "


75




80




85
வலம்படக் கிடந்த வழி நீர் துணியின்,
அலறு தலை மராமும், உலறு தலை ஓமையும்,
பொரி அரை உழிஞ்சிலும், புல் முளி மூங்கிலும்,
வரி மரல் திரங்கிய கரி புறக் கிடக்கையும்;
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும்
கானமும்; எயினர் கடமும்: கடந்தால்,
ஐவன வெண்ணெலும், அறைக் கண் கரும்பும்,
கொய் பூந் தினையும், கொழும் புன வரகும்,
காயமும், மஞ்சளும், ஆய் கொடிக் கவலையும்,
வாழையும், கமுகும், தாழ் குலைத் தெங்கும்,
மாவும், பலாவும், சூழ் அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்:
அம் மலை வலம் கொண்டு அகன் பதிச் செல்லுமின்-

" இடப்பக்கத்துச் செல்லும் வழி "




90




95



100
அவ் வழிப் படரீர் ஆயின், இடத்து,
செவ்வழிப் பண்ணின் சிறை வண்டு அரற்றும்
தடம் தாழ் வயலொடு தண் பூங் காவொடு
கடம் பல கிடந்த காடுடன் கழிந்து,
திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின்,
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு: ஆங்கு,
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின்
புண்ணியசரவணம், பவகாரணியோடு,
இட்டசித்தி, எனும் பெயர் போகி,
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்று உள: ஆங்கு,
புண்ணியசரவணம் பொருந்துவிர் ஆயின்,
விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர்;
பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின்
பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர்;
இட்டசித்தி எய்துவிர் ஆயின்
இட்டசித்தி எய்துவிர் நீரே.
ஆங்குப் பிலம் புக வேண்டுதிர் ஆயின்,
105




110




115




120




125
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது,
சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து,
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால்,
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலை,
பொலங் கொடி மின்னின் புயல் ஐங் கூந்தல்,
கடி மலர் அவிழ்ந்த கன்னிகாரத்து,
தொடி வளைத் தோளி ஒருத்தி தோன்றி,
“இம்மைக்கு இன்பமும், மறுமைக்கு இன்பமும்,
இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர்
செம்மையில் நிற்பதும், செப்புமின், நீயிர்? இவ்
வரைத் தாள் வாழ்வேன்; வரோத்தமை என்பேன்;
உரைத்தார்க்கு உரியேன்; உரைத்தீர் ஆயின்,
திருத்தக்கீர்க்குத் திறந்தேன் கதவு” எனும்.
கதவம் திறந்து, அவள் காட்டிய நல் நெறிப்
புதவம் பல உள, போகு இடைகழியன;
ஒட்டுப் புதவம் ஒன்று உண்டு; அதன் உம்பர்
வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி,
“இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால்,
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள்” எனும்;
“உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன்;
நெடு வழிப் புறத்து நீக்குவல் நும்” எனும்.
உரைத்தார் உளர் எனின், உரைத்த மூன்றின்
கரைப்படுத்து, ஆங்குக் காட்டினள் பெயரும்.


130




135




140
அரு மறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்,
வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி,
வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின்,
காண்தகு மரபின அல்ல மற்றவை.
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொன் தாமரைத் தாள் உள்ளம் பொருந்துமின்.
உள்ளம் பொருந்துவிர் ஆயின், மற்று அவன்
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும்;
தோன்றியபின் அவன் துணை மலர்த் தாள் இணை
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி,
மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகுமின்;
காண்தகு பிலத்தின் காட்சி ஈது.

" இடைபட்ட வழி "





145
‘ஆங்கு அந் நெறிப் படரீர் ஆயின், இடையது
செந் நெறி ஆகும்; தேம் பொழில் உடுத்த
ஊர் இடையிட்ட காடு பல கடந்தால்
ஆர் இடை உண்டு, ஓர் ஆர் அஞர்த் தெய்வம்;
நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி,
இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும்.
மடுத்து உடன் கிடக்கும் மதுரைப் பெருவழி,
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல்
தாள் தொழு தகையேன் போகுவல் யான்’ என-

" கவுந்தி அடிகளின் கட்டுரை
"

150




155




160
மா மறையோன் வாய் வழித் திறம் கேட்ட
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும்:
‘நலம் புரி கொள்கை நான்மறையாள!
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை;
கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட்டு-இயற்கையின் விளங்கக் காணாய்;
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பில் காணாயோ, நீ?
வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ, எய்தா அரும் பொருள்?
காமுறு தெய்வம் கண்டு அடி பணிய
நீ போ; யாங்களும் நீள் நெறிப் படர்குதும்’
என்று அம் மறையோற்கு இசை மொழி உணர்த்தி-
 

"மூவரும் மேற்செல்லும் போது, வழி நடந்த வருத்தத்தால் கவுந்தி அடிகளும் கண்ணகியும் வழிமருங்கு இருப்ப, கோவலன் அண்மையிலுள்ள ஒரு பொய்கைக்கு நீர் அருந்தச் செல்லுதல்"



165




170
குன்றாக் கொள்கைக் கோவலன்-தன்னுடன்
அன்றைப் பகல் ஓர் அரும் பதித் தங்கி,
பின்றையும் அவ் வழிப் பெயர்ந்து செல் வழிநாள்-
கருந் தடங் கண்ணியும் கவுந்தி அடிகளும்
வகுத்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப-
இடை நெறிக் கிடந்த இயவு கொள் மருங்கின்,
புடை நெறிப் போய், ஓர் பொய்கையில் சென்று,
நீர் நசைஇ வேட்கையின் நெடுந் துறை நிற்ப-

"வனதேவதை வசந்தமாலையின் உருவில் தோன்றி, கோவலனிடம் முறையிடுதல்
"





175




180




185




190
கான் உறை தெய்வம் காதலின் சென்று,
‘நயந்த காதலின் நல்குவன் இவன்’ என,
வயந்தமாலை வடிவில் தோன்றி,
கொடி நடுக்கு உற்றது போல, ஆங்கு-அவன்
அடிமுதல் வீழ்ந்து, ஆங்கு, அரும் கணீர் உகுத்து,
“வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீது இலேன்; பிழை மொழி செப்பினை; ஆதலின்,
கோவலன் செய்தான் கொடுமை” என்று, என் முன்
மாதவி மயங்கி, வான் துயர் உற்று,
“மேலோர் ஆயினும், நூலோர் ஆயினும்,
பால் வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்,
பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம்” என,
செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்
வெண் முத்து உதிர்த்து, வெண்நிலாத் திகழும்
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து,
துனி உற்று என்னையும் துறந்தனள்; ஆதலின்
மதுரை மூதூர் மா நகர்ப் போந்தது
எதிர் வழிப் பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப,
சாத்தொடு போந்து தனித் துயர் உழந்தேன்;
பாத்து-அரும் பண்ப! நின் பணி மொழி யாது? என-

"கோவலன் மந்திரத்தால் உண்மையை அறிய முயலுதல்
"




195
‘மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டு உண்டு’ என
வியத்தகு மறையோன் விளம்பினன்; ஆதலின்,
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இவ்
ஐஞ் சில் ஓதியை அறிகுவென் யான்’ என-

" தெய்வம் மந்திர வலிமைக்கு ஆற்றாது, உண்மை உரைத்து நீங்குதல்
"





200
கோவலன் நாவில் கூறிய மந்திரம்
பாய் கலைப் பாவை மந்திரம் ஆதலின்,
‘வன-சாரிணி யான்; மயக்கம் செய்தேன்;
புன மயில் சாயற்கும், புண்ணிய முதல்விக்கும்,
என் திறம் உரையாது ஏகு’ என்று ஏக-

" கோவலன் தாமரை இலையில் தண்ணீர் கொணர்ந்து, கண்ணகியின் தாகத்தைத் தீர்த்தல்
"

தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்து, ஆங்கு,
அயா உறு மடந்தை அரும் துயர் தீர்த்து-

" வெயிலின் வெம்மை மிகுதலால் கானத்தில் செல்லுதல் அரிது என்று அண்மையிலுள்ள ஐயை கோட்டத்தை மூவரும் அடைதல்
"



205




210




215
மீது செல் வெங்கதிர் வெம்மையின் தொடங்க,
‘தீது இயல் கானம் செலவு அரிது’ என்று
கோவலன்-தன்னொடும் கொடுங் குழை மாதொடும்
மாதவத்து ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து,
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை,
ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது,
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர்
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி,
வேற்றுப் புலம் போகி, நல் வெற்றம் கொடுத்து,
கழி பேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்
விழி நுதல் குமரி, விண்ணோர் பாவை,
மை அறு சிறப்பின் வான நாடி,
ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு-என்.