Cilipidikaram-Padipurai
மதுரைக் காண்டம்

5. அடைக்கலக் காதை

"கவுந்திக்கு மதுரையின் காட்சியையும் அரசனின் கொற்றத்தையும் கோவலன் உரைத்தல்"





5




10
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர்க்
கோலின் செம்மையும், குடையின் தண்மையும்,
வேலின் கொற்றமும், விளங்கிய கொள்கை,
பதி எழு அறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மா நகர் கண்டு; ஆங்கு,
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து:
தீது தீர் மதுரையும், தென்னவன் கொற்றமும்,
மாதவத்து ஆட்டிக்குக் கோவலன் கூறுழி-

"மாடல மறையவன் வர, கோவலன் அவனை வணங்குதல்"






15
தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து,
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை
மா மறை முதல்வன் மாடலன் என்போன்
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து,
தமர்முதல் பெயர்வோன், தாழ் பொழில் ஆங்கண்,
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க,
கவுந்தி இடவயின் புகுந்தோன்-தன்னை
கோவலன் சென்று சேவடி வணங்க-

"கோவலன் செய்த அறங்களை மாடலன் பாராட்டி, அவன் மனைவியுடன் தனியாக மதுரை வந்ததற்கு இரங்குதல்
"

20
நா வல் அந்தணன் தான் நவின்று, உரைப்போன்-

"முதுமறையோனை மத யானையிடமிருந்து விடுவித்தமை
"





25




30




35




40




45




50


‘வேந்து உறு சிறப்பின் விழுச் சீர் எய்திய,
மாந்தளிர் மேனி, மாதவி மடந்தை
பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து,
வாலாமை நாள் நீங்கிய பின்னர்,
மா முது கணிகையர், “மாதவி மகட்கு
நாம நல் உரை நாட்டுதும்” என்று
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு, ஆங்கு,
“இடைஇருள் யாமத்து எறி திரைப் பெரும் கடல்
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின்,
நண்ணு வழி இன்றி, நாள் சில நீந்த,
‘இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்;
வந்தேன்; அஞ்சல்; மணிமேகலை யான்;
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது;
துன்பம் நீங்கித் துயர்க் கடல் ஒழிக’ என,
விஞ்சையின் பெயர்த்து, விழுமம் தீர்த்த,
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக’ என:
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
“மணிமேகலை” என வாழ்த்திய ஞான்று;
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு
செம் பொன் மாரி செங் கையின் பொழிய;
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன்,
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை;
பாகு கழிந்து, யாங்கணும் பறை பட, வரூஉம்
வேக யானை வெம்மையின் கைக்கொள்;
ஒய் எனத் தெழித்து, ஆங்கு, உயர் பிறப்பாளனைக்
கைஅகத்து ஒழித்து, அதன் கைஅகம் புக்கு,
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி,
மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப,
பிடர்த்தலை இருந்து, பெரும் சினம் பிறழாக்
கடக் களிறு அடக்கிய கருணை மறவ!

"கீரியைக் கொன்ற பார்ப்பனியின் துயர் தீர்த்தமை
"


55




60




65




70




75
பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக,
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல,
வடதிசைப் பெயரும் மா மறையாளன்,
“கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல் ஏடு
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க” என,
பீடிகைத் தெருவின் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறும் மறுகி,
“கருமக் கழி பலம் கொள்மினோ” எனும்
அரு மறை ஆட்டியை அணுகக் கூஉய்,
“யாது நீ உற்ற இடர்? ஈது என்?” என,
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி,
“இப் பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி,
கைப் பொருள் தந்து, என் கடுந் துயர் களைக’ என
அஞ்சல்! உன்-தன் அரும் துயர் களைகேன்;
நெஞ்சு உறு துயரம் நீங்குக” என்று, ஆங்கு,
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கையின்,
தீத் திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க,
தானம் செய்து, அவள்-தன் துயர் நீக்கி
கானம் போன கணவனைக் கூட்டி,
ஒல்காச் செல்வத்து உறு பொருள் கொடுத்து,
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ!

"பூதம் கொன்ற தீயோனின் சுற்றத்தாரைப் பாதுகாத்தமை"






80




85




90



பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த,
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரி பொய்த்து, அறைந்து உணும் பூதத்துக்
கறை கெழு பாசத்துக்கை அகப்படலும்,
பட்டோன் தவ்வை படு துயர் கண்டு
கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி,
“என் உயிர் கொண்டு, ஈங்கு இவன் உயிர் தா” என,
நல் நெடும் பூதம் நல்காதாகி,
“நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு,
பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை;
ஒழிக, நின் கருத்து” என, உயிர் முன் புடைப்ப,
அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து, அவன்
சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து,
பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல்!
இம்மைச் செய்தன யான் அறி நல்வினை;
உம்மைப் பயன்கொல், ஒரு தனி உழந்து, இத்
திருத்தகு மா மணிக் கொழுந்துடன் போந்தது,
விருத்த கோபால! நீ?’ என வினவ-

"கோவலன் தான் கண்ட கனவைக் கூறல்"


95




100




105
கோவலன் கூறும்: ‘ஓர் குறுமகன்-தன்னால்,
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில்,
நாறு ஐங் கூந்தல் நடுங்கு துயர் எய்த,
கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும்;
அணித்தகு புரி குழல் ஆய்-இழை-தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும்;
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து,
காமக்கடவுள் கையற்று ஏங்க,
அணி திகழ் போதி அறவோன்-தன் முன்,
மணிமேகலையை மாதவி அளிப்பவும்;
நனவு போல, நள் இருள் யாமத்து,
கனவு கண்டேன்: கடிது ஈங்கு உறும்’ என-

"கவுந்தியும் மாடலனும் கோவலனுக்குக் கூறிய ஆறுதல் உரைகள்"





110
‘அறத்து உறை மாக்கட்கு அல்லது, இந்தப்
புறச்சிறை இருக்கை பொருந்தாது; ஆகலின்,
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின் நின்
உரையின் கொள்வர்; இங்கு ஒழிக நின் இருப்பு;
காதலி-தன்னொடு கதிர் செல்வதன்முன்,
மாட மதுரை மா நகர் புகுக’ என,
மாதவத்து ஆட்டியும் மா மறை முதல்வனும்
கோவலன்-தனக்குக் கூறும்காலை-

"மாதரி என்னும் ஆயர் குல முதுமகள் கவுந்தியை வணங்குதல்"


115
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங் கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்து, பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள், மாதரி என்போள்,
காவுந்தி ஐயையைக் கண்டு, அடி தொழலும்-

"கவுந்தி மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தல்"


120




125




130
‘ஆ காத்து ஓம்பி, ஆப் பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை;
தீது இலள்; முதுமகள்; செவ்வியள்; அளியள்;
மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்று’ என எண்ணினளாகி,
‘மாதரி! கேள்; இம் மடந்தை-தன் கணவன்
தாதையைக் கேட்கின், தன் குலவாணர்
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு,
கருந் தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்;
உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்,
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்-

"கவுந்தி அடிகள் மாதரியிடம் கண்ணகியைப் போற்றும் வகை கூறி, அவளைப் பாராட்டி உரைத்தல்"






135




140




145
மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் தீட்டி,
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து,
தூ மடி உடீஇ; தொல்லோர் சிறப்பின்
ஆயமும், காவலும், ஆய்-இழை-தனக்கு,
தாயும், நீயே ஆகித் தாங்கு: ஈங்கு,
என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்:
கடுங் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு
நடுங்கு துயர் எய்தி, நாப் புலர வாடி,
தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி,
இன் துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது,
பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலமால்:
வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது;
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு; என்னும்
அத்தகு நல் உரை அறியாயோ நீ?-

"தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளினால் வரும் இன்பம் பற்றிக் கவுந்தி அடிகள் மாதரிக்கு உரைத்தல்"



150




155




160

தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும்,
மிகப் பேர் இன்பம் தரும்; அது கேளாய்;
காவிரிப் படப்பைப் பட்டினம்-தன்னுள்
பூ விரி பிண்டிப் பொது நீங்கு திரு நிழல்,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலமேல் இருந்தருளி,
தருமம் சாற்றும் சாரணர்-தம் முன்;
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்,
தாரன் மாலையன், தமனியப் பூணினன்,
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்துப்
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை;
சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது, “ஈங்கு
யாது இவன் வரவு?” என, இறையோன் கூறும்:

"சாரணர் கூறிய குரங்குக்கை வானவனது வரலாறு"




165




170




175




180




185




190
“எட்டி சாயலன் இருந்தோன்-தனது
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில், ஓர்
மாதவ முதல்வனை மனைப் பெரும் கிழத்தி
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி, உள்புக்கு,
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி,
உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி,
எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்து, ‘நின்
மக்களின் ஓம்பு, மனைக்கிழத்தீ!’ என,
மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பி;
காதல் குரங்கு கடைநாள் எய்தவும்,
தானம் செய்வுழி, அதற்கு ஒரு கூறு
‘தீது அறுக’ என்றே செய்தனள்: ஆதலின்,
மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள்,
உத்தர-கௌத்தற்கு ஒரு மகன் ஆகி;
உருவினும் திருவினும், உணர்வினும், தோன்றி;
பெரு விறல் தானம் பலவும் செய்து; ஆங்கு,
எண்-நால் ஆண்டின் இறந்த பிற்பாடு;
விண்ணோர் வடிவம் பெற்றனன்: ஆதலின்,
‘பெற்ற செல்வப் பெரும் பயன் எல்லாம்
தற்காத்து அளித்தோள் தானச் சிறப்பு’ என,
பண்டைப் பிறப்பில் குரங்கின் சிறு கை
கொண்டு, ஒரு பாகத்து; ‘கொள்கையின் புணர்ந்த
சாயலன் மனைவி தானம்-தன்னால்
ஆயினன் இவ் வடிவு; அறிமினோ, என,
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்டத்
தேவ குமரன் தோன்றினன்” என்றலும்-

"கவுந்தி மாதரியிடம் ‘கண்ணகியை அழைத்துச் செல்க’ எனல்"





195



சாரணர் கூறிய தகைசால் நல்மொழி
ஆர் அணங்கு ஆக, அறம் தலைப்பட்டோர்
அன்று அப் பதியுள் அரும் தவ மாக்களும்,
தன் தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்,
இட்ட தானத்து எட்டியும், மனைவியும்,
முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்;
கேட்டனை ஆயின், தோட்டு-ஆர் குழலியொடு
நீட்டித்திராது, நீ போக’ என்றே கவுந்தி கூற-

"மாதரி கண்ணகியுடன் மாலையில் தன் மனைக்குச் செல்லுதல்"


200




205




210




215



உவந்தனள் ஏத்தி,
வளர் இள வன முலை, வாங்கு அமைப் பணைத் தோள்,
முளை இள வெண் பல், முதுக்குறை நங்கையொடு;
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்து;
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப,
மறித் தோள் நவியத்து உறிக் காவாளரொடு
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ;
மிளையும், கிடங்கும், வளை வில் பொறியும்,
கரு விரல் ஊகமும், கல் உமிழ் கவணும்,
பரிவுறு வெந் நெயும், பாகு அடு குழிசியும்,
காய் பொன் உலையும், கல் இடு கூடையும்,
தூண்டிலும், தொடக்கும், ஆண்டலை அடுப்பும்,
கவையும், கழுவும், புதையும், புழையும்,
ஐயவித் துலாமும், கை பெயர் ஊசியும்,
சென்று எறி சிரலும், பன்றியும், பணையும்,
எழுவும், சீப்பும், முழு விறல் கணையமும்,
கோலும், குந்தமும், வேலும், பிறவும்,
ஞாயிலும், சிறந்து, நாள் கொடி நுடங்கும்
வாயில் கழிந்து; தன் மனை புக்கனளால்-
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து-என்.