Cilipidikaram-Padipurai
உரை பெறு கட்டுரை

1
அன்றுதொட்டு, பாண்டியன் நாடு மழை வறம் கூர்ந்து, வறுமை எய்தி, வெப்பு-நோயும் குருவும் தொடர, கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்கொன்று, கள-வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது.

2

அது கேட்டு, கொங்கு இளங்கோசர் தங்கள் நாட்டகத்து, நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய, மழை தொழில் என்றும் மாறாதாயிற்று.

3

அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாள் பலி-பீடிகைக் கோட்டம் முந்துறுத்து-ஆங்கு, ‘அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள் அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பல் முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி, பிழையா விளையுள் நாடு ஆயிற்று.

4

அது கேட்டு, சோழன் பெருங்கிள்ளி கோழிஅகத்து, ‘எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுள் ஆகும்’ என, நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே.